
அவசரகால பயணத்திற்காக கொண்டுவரப்பட்ட தட்கல் சேவை முறையில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு இ ஆதார் வெரிஃபிகேஷனை இனி கட்டாயமாக்க ரயில்வே திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதிகப்படியானோர் ஐஆர்சிடிசி இணையதளத்தை பயன்படுத்தி தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வரும் நிலையில் ஐஆர்சிடிசி இணையதளத்தில் ஆதார் எண் கொண்டு டிக்கெட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.
பலர் ஆதார் எண்ணை கொடுக்காமலே ஐஆர்சிடிசி அக்கவுண்டை பயன்படுத்தி தானியங்கி செயலி மூலம் முறைகேடாக தட்கல் டிக்கெட்டுகளை புக் செய்வதாக ரயில்வே துறை நடத்திய ஆய்வில் தெரிய வந்தது. இதனால் பலருக்கு தட்கல் டிக்கெட் கிடைப்பதில் குளறுபடி ஏற்பட்டது. பயனர்கள் கொடுத்த புகார் அடிப்படையில் தாமாக முன்வந்து ரயில்வே விசாரணை நடத்தி இருந்தது. அதில் 24 மில்லியன் போலி ஐஆர்சிடிசி அக்கவுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு பிளாக் செய்யப்பட்டது.
ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதில் ஏற்படும் குளறுபடிகள் கோளாறுகளை தவிர்க்கும் வகையில் குறிப்பாக தட்கலில் டிக்கெட் விற்பனையில் உள்ள சிக்கல் மற்றும் முறைகேடுகளை தவிர்க்க புதிய தட்கல் சேவை நடைமுறையை மத்திய ரயில்வே அமல்படுத்த இருப்பதாக அத்துறையின் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
அதன்படி ஆதார் வெரிஃபிகேஷன் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் மட்டுமே தட்கல் டிக்கெட்டுகளை இனி ஆன்லைனில் புக் செய்ய முடியும். அதேபோல ஆதார் ஒடிபிஐ வைத்து தட்கல் டிக்கெட் புக் செய்வது கட்டாயப்படுத்தப்படும். ஆதாருடன் இணைக்கப்பட்ட கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே தட்கல் சேவையில் முன்னுரிமை கிடைக்கும் எனவும் ரயில்வே துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பிளாக்கில் டிக்கெட் விற்பதை தடுக்கும் வகையில் தட்கல் விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என ரயில்வே துறை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.