Skip to main content

மருத்துவர் பிரியங்கா கொல்லப்பட்டது எப்படி..? திடுக்கிட வைக்கும் தகவல்கள்...

Published on 30/11/2019 | Edited on 30/11/2019

தெலங்கானாவில் பெண் மருத்துவர் எரித்து கொல்லப்பட்ட வழக்கில் 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

 

priyanka reddy case accused arrested

 

 

தெலங்கானா மாநிலம் மகபூப் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரியங்கா (26) மாதப்பூர் கால்நடை அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த புதன்கிழமை வழக்கம்போல் பணிக்கு சென்ற பிரியங்கா, இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, காணாமல் போயுள்ளார். இறுதியாக அவரது சகோதரிக்கு போன் மூலம் தொடர்பு கொண்ட அவர், தன்னை யாரோ முறைத்து பார்ப்பதாகவும், பயமாக இருப்பதாகவும் கூறியுள்ளார். அதன் பின் அவரது போனை தொடர்புகொள்ள முடியவில்லை. இதனையடுத்து அவர் வீடு திரும்பாத நிலையில், அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்நிலையில், ரங்காரெட்டி மாவட்டம் சட்டப்பள்ளி பாலத்தின் கீழ் அடையாளம் தெரியாத பெண், எரிந்த நிலையில் சடலமாக இருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார், எரிந்த நிலையில் சடலமாக கிடந்த பெண், பிரியங்காதான் என்பதை உறுதி செய்தனர். பெண் மருத்துவர் எரித்துக்கொல்லப்பட்ட இந்த சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், இந்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, முகமது பாஷா, சிவா, நவீன், சென்ன கேசவுலு ஆகியோரை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அவர்கள்தான் இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

 

priyanka reddy case accused arrested

 

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சைபராபாத் காவல் ஆணையர், "வழக்கமாக சின்ஷபள்ளியில் உள்ள சுங்கச்சாவடியில் வண்டியை நிறுத்திவிட்டு, அங்கிருந்து பொதுப் போக்குவரத்து மூலமாக மருத்துவமனைக்கு சென்று வந்துள்ளார் பிரியங்கா. சம்பவம் நடந்த அன்று வழக்கம் போல தனது வண்டியை நிறுத்திவிட்டு பணிக்கு சென்றுள்ளார். அப்போதிலிருந்து வண்டியை நோட்டமிட்ட முகமது பாஷாவின் கும்பல் அவரது வண்டியை பஞ்சர் செய்துள்ளது. பின்னர் பணி முடிந்து திரும்பிய ப்ரியங்காவிடம் வாகனத்தை சரிசெய்து தருவதாக கூறி அவரை இழுத்து சென்றுள்ளது. போதையில் இருந்த அந்த கும்பல் பிரியங்காவை ஆள் இல்லாத இடத்திற்கு தூக்கிச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்து, கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளது. பின்னர் ப்ரியங்காவின் உடலை தார்பாயில் சுற்றி லாரியில் போட்டு எடுத்துச் கொண்டு கட்டபள்ளி என்ற இடத்தில் உள்ள பாலத்தின் அடியில் வைத்து எரித்துள்ளது" என தெரிவித்தார். சிசிடிவி காட்சியின் அடிப்படையில், இந்த நால்வரும் தான் குற்றத்தில் ஈடுபட்டதாக சைபராபாத் காவல்துறை உறுதி செய்திருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை பா.ஜ.க ரத்து செய்யும்” - மத்திய அமைச்சர் அமித்ஷா

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Union Minister Amit Shah says BJP will cancel reservation for Muslims

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

இதனையடுத்து, மொத்தம் 17 மக்களவைத் தொகுதிகள் கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் நான்காம் கட்டமாக மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பாரத ராஷ்டிர சமிதி கட்சி, பா.ஜ.க ஆகிய கட்சிகள் களம் இறங்குகிறது. அந்த வகையில், காங்கிரஸ் கட்சி தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது. 

அந்த வகையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெலுங்கானாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். அப்போது பேசிய அவர், “மஜ்லிஸுக்கு பயந்து காங்கிரசும், டி.ஆர்.எஸ் கட்சியும் தெலுங்கானா விடுதலை தினத்தைக் கொண்டாடுவதில்லை. மஜ்லிஸுக்கு பயப்படாததால் தெலுங்கானா விடுதலை தினத்தை கொண்டாடுவோம் எனப் பா.ஜ.க முடிவு செய்துள்ளது. காங்கிரஸ் மற்றும் டி.ஆர்.எஸ் இஸ்லாமியர்களுக்கு வழங்கிய இடஒதுக்கீட்டை ரத்து செய்து பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு பாஜக வழங்கும்.

காங்கிரஸும், டி.ஆர்.எஸ்.ஸும் ராமர் கோயில் கட்டுவதை ஒருபோதும் விரும்பவில்லை. 370வது சட்டப்பிரிவை ரத்து செய்துவிட்டு, காஷ்மீரை என்றென்றும் இந்தியாவுடன் ஒருங்கிணைத்தார் நரேந்திர மோடி. மத்திய பாஜக தலைமையிலான அரசு, 10 ஆண்டுகளில், நீண்ட காலமாக நாட்டில் நிலவி வந்த பிரச்னைகளுக்கு தீர்வு கண்டுள்ளது. சட்டப்பிரிவு 370ஐ நீக்கியதன் மூலம், காஷ்மீரை நாட்டோடு என்றென்றும் ஒருங்கிணைத்துவிட்டார் மோடி. ரகுநந்தன் ராவுக்கு அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்கும் மோடியை மீண்டும் பிரதமராக்க உதவும்” என்று கூறினார். 

Next Story

நொடிப்பொழுதில் நிகழ்ந்த மரணம்! வெளியான அதிர்ச்சி வீடியோ!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Youth passed away after falling into water tank in Hyderabad

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் அருகே அமைந்துள்ளது கஜ்ஜிபவுலி. இப்பகுதியில் உள்ள தனியார் விடுதியில் வசித்து வந்தவர் ஷேக் அக்மல் சுபியான். 24 வயதான ஷேக் அக்மல் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவர், பணி செய்வதற்கு ஏதுவாக வேலை செய்யும் ஐடி நிறுவனம் அருகிலேயே தனியார் விடுதியில் தங்கியிருந்துள்ளர்.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி விடுமுறை என்பதால் ஷேக் அக்மல் விடுதி அருகில் உள்ள கடைக்கு மளிகை பொருட்கள் வாங்கச் சென்றுள்ளார். தேவையானதை வாங்கி முடித்தவர் மீண்டும் தனது விடுதிக்கு திரும்பியுள்ளார். அப்போது, அவர் தங்கியிருந்த விடுதியின் கேட் அருகே தண்ணீர் தொட்டி திறந்து கிடந்துள்ளது. ஆனால், அதனைக் கவனிக்காமல் சென்ற ஷேக் அக்மல், விடுதி வாசல் அருகே திறந்து வைக்கப்பட்டு இருந்த தண்ணீர் தொட்டில் தவறி விழுந்துள்ளார். நொடி பொழுதில் எதிர்பாராமல் தண்ணீர் தொட்டியில் விழுந்த வேகத்தில் ஷேக் அக்மல் சுபியானின் முக நாடிப் பகுதி தண்ணீர் தொட்டியின் கான்கீரிட் மீது பலமாக மோதி உடைந்தது. அதில், ரத்தம் கொட்டி மயக்க நிலையில் அவர் தண்ணீர் தொட்டியினுள் மூழ்கியதாக கூறப்படுகிறது. இதனை யாரும் கவனிக்காத நிலையில், இளைஞர் கீழே விழுந்த சத்தம் வீட்டின் உள்ளே இருந்த சிறுவனுக்கு மட்டும் கேட்டுள்ளது. சத்தம் கேட்ட அந்தச் சிறுவன் விளையாடிக் கொண்டிருந்ததை விட்டுவிட்டு விடுதி பொறுப்பாளரிடம் கூறுயுள்ளார். அப்போது, விடுதி வாசலுக்கு வந்தவர், திறந்துக்கிடந்த தண்ணீர் தொட்டிக்குள் யாரேனும் உள்ளனரா எனத் தேடிப்பார்த்துள்ளார்.

ஆனால், யாரும் தென்படாத நிலையில், தனது வழக்கமான பணிகளை மேற்கொள்ள அவர் சென்றுவிட்டார். அதன் பிறகு அங்கிருந்தவர்களும் தங்களது பணிகளை மேற்கொள்ள சென்றுவிட்டனர் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, மாலை நேரத்தில் ஷேக் அக்மல் காணவில்லை என்ற தகவல் விடுதி காப்பாளருக்குச் சென்றுள்ளது. அவர், விடுதியின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளார். அப்போதுதான் நடந்த அதிர்ச்சி சம்பவம் அனைவருக்கும் தெரிய வந்தது. கடைசியாக கடைக்குச் சென்று திரும்பிய ஷேக் அக்மல் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த காட்சிகள் சிசிடிசியில் பதிவிவாகி இருந்தது. இதைப்பார்த்து அதிர்ந்து போன விடுதி காப்பாளர் அங்கிருந்தவர்கள் உதவியுடன் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த  ஷேக் அக்மலினை மீட்டனர். ஆனால், அவர் இறுதியில் சடலமாகவே மீட்கப்பட்டார். இதையடுத்து, நடந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஷேக் அக்மல் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இதனிடையே, ஷேக் அக்மல் தவறி விழும் சிசிடிசி காட்சிகள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி  வருகிறது. அதில், ஷேக் அக்மல் தவறி விழுவதும், உடனே சத்தம் கேட்டு குழந்தை விடுதி பொறுப்பாளரை எச்சரிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. ஆனால், விடுதி பொறுப்பாளர் தேடிப்பார்த்தும் யாரும் உள்ளே விழுந்தது போல தெரியாததால் அவர் மற்ற பணிகளைச் செய்வதும் தெரிய வந்துள்ளது. இதற்கிடையில், வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் துவங்கிய போலீசார் அஜாக்கிரதையாக தண்ணீர் தொட்டியைத் திறந்து வைத்த விடுதி உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இளைஞர் ஒருவர் தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத் அருகே வீட்டின் தண்ணீர் தொட்டியில் விழுந்த ஐடி ஊழியர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.