கர்நாடகாவில் அடுத்த மாதம் 10 ஆம் தேதி (10.05.2023) சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் தற்போது அங்கு ஆட்சியிலிருக்கும் பாஜகவும், எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸும் தேர்தலுக்கான பரப்புரையைத் தொடங்கியுள்ளனர். இதனால் அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டமன்றத் தொகுதிகள் உள்ள நிலையில், இழந்த ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸும், இருக்கும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளும் முனைப்பில் பாஜகவும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. பாஜக சார்பில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதேபோன்று காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்களும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கர்நாடகாவில் இரண்டு நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டு காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக நேற்று (25.04.2023) மைசூரு மாவட்டம் டி.நரசிப்புராவில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
இதுகுறித்து பிரியங்கா காந்தி தனது ட்விட்டரில், "இன்று காலை பழம்பெரும் உணவகம் ஒன்றில் அதன் உரிமையாளர்களுடன் சேர்ந்து தோசைகள் சுட்டு மகிழ்ந்தேன். கடின உழைப்புடன் கூடிய நேர்மையான நிறுவனத்திற்கு இந்த உணவகம் சிறந்த உதாரணம் ஆகும். உங்களின் இந்த விருந்தோம்பலுக்கு நன்றி. இங்கு தோசைகளும் சுவையாக இருந்தன. மைசூருக்கு என் மகளை அழைத்து வந்து சாப்பிட வைக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.