Skip to main content

“பெண்ணாக இருப்பது குற்றமாகிவிட்டது” - பிரியங்கா காந்தி தாக்கு

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
 Priyanka Gandhi criticized Uttarpradesh governmet and says Being a woman has become a crime

உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூர் மாவட்டத்தில் தொழிலதிபர் ஒருவர் செங்கல் சூளை ஒன்று நடத்தி வருகிறார். இந்த சூளையில், 2 சிறுமிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் உட்படப் பலர் வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில், கடந்த வாரம் இரண்டு சிறுமிகளும் வயல்வெளிக்குச் சென்றுள்ளனர். மாலை சென்ற இவர்கள் இரவு வரை வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அவர்களது குடும்பத்தினர், வெளியே சென்று தேடி வந்துள்ளனர். அப்போது, அருகே உள்ள மரம் ஒன்றில் 2 சிறுமிகளின் உடல்கள் தூக்குப் போட்ட நிலையில் இருந்தன.

இதில் அதிர்ச்சியடைந்த அவர்கள், இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், 2 சிறுமிகளின் உடல்களையும் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில், செங்கல் சூளை நடத்தி வரும் தொழிலதிபரின் 18 வயது மகன் மற்றும் அவருடைய 19 வயது மருமகன் இருவரும் சேர்ந்து, அந்த 2 சிறுமிகளுக்கு கட்டாயப்படுத்தி மதுபானம் கொடுத்துள்ளனர். இதில் மயக்கமடைந்த சிறுமிகளை, இருவரும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதன் பின்னர், இதனை தங்கள் செல்போன் மூலம் வீடியோவாகவும் எடுத்துள்ளனர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, இந்த வழக்கில் தொழிலதிபர் மற்றும் அந்த இளைஞர்கள் 2 பேர் என 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், செங்கல் சூளை தொழிலதிபர் ராம்ரூப் நிஷாத் (48), அவரது மகன் ராஜு (18), மருமகன் சஞ்சய் (19)  ஆகியோர் ஈடுபட்டுள்ளனர் என்று தெரியவந்தது. மேலும், அவர்களின் செல்போனில் இருந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

ஒரு வாரத்திற்கு முன்பு சிறுமிகள் தூக்குப்போட்டு இறந்த நிலையில், அவர்களில் ஒருவரின் தந்தையின் உடலைத் தூக்குப் போட்ட நிலையில் போலீசார் மீட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. மேலும், அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு யாரும் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டனரா? என்ற கோணத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தற்கொலை செய்து கொண்ட அடுத்த ஒரு வாரத்திற்குள் அவரது தந்தை மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவம் குறித்து பலரும் தங்களது கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, உத்தரப்பிரதேச அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘கான்பூரில் கூட்டு பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட இரண்டு சிறுமிகள் தற்கொலை செய்து கொண்டனர். தற்போது அந்த சிறுமிகளின் தந்தை ஒருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பத்தாரிடம் சமரசம் செய்ய அழுத்தம் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

உத்தரபிரதேசத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிகளும், பெண்களும் நீதி கேட்டால், அவர்களது குடும்பங்களை அழிக்கும் விதியாகிவிட்டது. உன்னாவ், ஹத்ராஸ் முதல் கான்பூர் வரை எங்கு பெண்கள் சித்திரவதை செய்யப்பட்டாலும், அவர்களது குடும்பங்கள் அழிக்கப்படுகின்றன. சட்டம் என்று எதுவும் இல்லாத இந்தக் காட்டில் பெண்ணாக இருப்பது குற்றமாகிவிட்டது. எல்லாவற்றிற்கும் மேலாக, மாநிலத்தின் கோடிக்கணக்கான பெண்கள் என்ன செய்ய வேண்டும், அவர்கள் எங்கு செல்ல வேண்டும்?” என்று பதிவிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்

Next Story

9 ஆவது உயிரிழப்பு; வெள்ளியங்கிரியில் மீண்டும் பரபரப்பு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
 9th casualty; Again excitement in Velliangiri

வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர். மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர்.

அண்மையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய வேலூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற இளைஞரும், சேலம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த கிரண் என்ற இளைஞரும் மலையேறும் போதே மூச்சுத்திணறி உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 25 ஆம் தேதி தெலுங்கானாவைச் சேர்ந்த சுப்பாராவ் (வயது 68). மருத்துவரான இவர் நான்காவது மலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அதேபோல் சேலத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் குரங்கு பாலம் என்ற பகுதியில் மயங்கி விழுந்து இறந்து போனார். மேலும் 26 ஆம் தேதி நான்கு மணி அளவில் மலையில் ஏறிக் கொண்டிருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவரும் மூச்சுத்திணறி உயிரிழந்தார். அதேபோல் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய ரகுராம் (வயது 50) என்பவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இப்படியாக வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வெள்ளியங்கிரியில் மலையேறும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் வனத்துறை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் வெள்ளியங்கிரியில் மலை ஏறிய புண்ணியகோடி என்ற 46 வயது மதிக்கத்தக்க நபர் உடல் குறைவால் உயிரிழந்துள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வெள்ளியங்கிரியின் ஒன்றாவது மலையில் சென்று கொண்டிருந்த பொழுது புண்ணியகோடி க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில்  செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த உயிரிழப்பின் மூலம் இதுவரை வெள்ளியங்கிரி மலை ஏற சென்று உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்துள்ளது.

Next Story

பொது இடத்தில் இளம்பெண் மீது தாக்குதல்; வைரலான வீடியோ காட்சி

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Viral video footage of Incident on girl in public place at chennai

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாகத் தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாகக் கூறப்படுகிறது. 

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமரவைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொது இடத்தில் இளம்பெண் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.