மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கிழக்கு உத்தரப் பிரதேசத்தின் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி நியமனம் செய்யப்பட்டார். அங்கு தனது கட்சி பணிகளை தற்போது அவர் கவனித்து வருகிறார். இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோ மற்றும் புல்பூர் மக்களவை தொகுதியை சேர்ந்த மக்கள் பிரியங்கா காந்தியை சந்தித்தனர். அப்போது இந்த இரண்டு தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் அவர் போட்டியிட வேண்டும் என அவர்கள் கூறினர். அப்போது அவர்களிடம் பேசிய அவர் 2019-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் போட்டியிட போவதில்லை என தெரிவித்தார். மேலும் மக்களவை தேர்தலை தொடர்ந்து, வரும் 2022 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வதில் கவனத்தை செலுத்தப்போவதாகவும் அவர் கூறியுள்ளார்.