Skip to main content

“பாஜகவின் பாக்கெட்டில் இருந்து இதுவரை ஒரு உதவியும் அறிவிக்கவில்லை”- பிரியங்கா காந்தி

Published on 25/11/2019 | Edited on 25/11/2019

மஹாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி கட்சிகள், சிவசேனா தலைமையில் ஆட்சியமைக்க தீவிர முயற்சி மேற்கொண்ட நிலையில், 22ஆம் தேதி இரவோடு இரவாக பேச்சு முடிந்து முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தது. இதில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார் துணை முதல்வராகவும் பொறுப்பேற்று அதிர்ச்சியூட்டினார். இதனால் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
 

priyanka gandhi

 

 

வருகிற 30ஆம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க கோரி பாஜகவுக்கு ஆளுநர் கெடு விதித்துள்ளார். 288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்ட சபையில் பெரும்பான்மையை நிரூபிக்க பாரதீய ஜனதாவுக்கு குறைந்தபட்சம் 145 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. பாரதீய ஜனதாவிடம் 105 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். சிவசேனாவுக்கு 56 எம்.எல்.ஏ.க்களும், சரத்பவாரின் தேசியவாத காங்கிரசுக்கு 54 எம்.எல்.ஏ.க்களும், காங்கிரசுக்கு 44 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். சிறிய கட்சிகளுக்கு 16 பேரும், சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 13 பேரும் உள்ளனர். 

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் உ.பி. மாநில கிழக்கு பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ட்விட்டரில் பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளார். அதில், “எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைக்க முயல்கிறது. அரசிலமைப்புச் சட்ட அமைப்புகளையும், அரசியலமைப்புச் சட்டத்தையும் புறக்கணித்துள்ளது பாஜக என்று தொலைக்காட்சி செய்திகள் தெரிவிக்கின்றன. கர்நாடக மாநிலத்தில் பாஜக என்ன விளையாட்டு விளையாடியதோ அதையேதான் மகாராஷ்டிராவிலும் பாஜக நிகழ்த்துகிறது

12 ஆயிரம் விவசாயிகள் மகாராஷ்டிராவில் தற்கொலை செய்துள்ளார்கள். ஆனால், அவர்களுக்கு பாஜகவின் பாக்கெட்டில் இருந்து இதுவரை ஒரு உதவியும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், பொதுப்படையாக எம்எல்ஏக்கள் கடத்தப்படுவதைப் பார்க்கத்தான் மக்கள் வாக்களித்துள்ளார்களா?” என்று பதிவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்