பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக கேரளா சென்றுள்ளார். இன்று மாலை விமானம் மூலம் கொச்சி வந்த அவர் பாஜக இளைஞர் பாசறை நடத்தும் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார். மத்தியப் பிரதேசத்தில் இருந்து கேரளாவிற்கு விமானம் மூலம் வந்த பிரதமர் மோடி கேரளாவின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் வேட்டி சட்டையுடன் வந்தார்.
கொச்சியில் உரையாற்றிய அவர், “கடந்த சில ஆண்டுகளாக கேரள இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்குவதற்கான முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இரண்டு விதமான சித்தாந்தங்களுக்கு இடையே நடக்கும் போராட்டங்களால் கேரளாவுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. ஒரு சித்தாந்தம் கேரளாவின் நலன்களுக்கு மேலாக தனது கட்சியை வைக்கிறது. மற்றொன்று ஒரு குடும்பத்தை எல்லாவற்றிற்கும் மேலாக வைக்கிறது. இவை இரண்டும் சேர்ந்து வன்முறை மற்றும் ஊழலை ஊக்குவிக்கின்றன. இந்த இரண்டு சித்தாந்தங்களையும் முறியடிக்க கேரள இளைஞர்கள் கடுமையாகப் போராட வேண்டும்.
ஒருபுறம், ஏற்றுமதியை அதிகரிக்கவும், கேரளாவின் பாரம்பரிய மருந்துகளை உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யவும் பாஜக அரசு இரவு பகலாக உழைத்து வருகிறது. ஆனால் மறுபுறம், ஒரு சிலர் வித்தியாசமான விளையாட்டை விளையாடுகிறார்கள். தங்கம் கடத்துவதற்காக உழைக்கிறார்கள்” எனக் கூறினார்.