Skip to main content

‘முன்களப் பணியாளர்களுக்கே முதலில் தடுப்பூசி’... பிரதமர் மோடி!

Published on 16/01/2021 | Edited on 16/01/2021

 

modi.jpg

 

கரோனா பரவலை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் ‘கோவிஷீல்ட்’, ‘கோவேக்சின்’ ஆகிய இரண்டு தடுப்பூசிகளுக்கு இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஜனவரி 16 முதல் கரோனா தடுப்பூசிகள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டது .

 

அதன்படி தடுப்பூசி வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (16/01/2021) தொடங்கி வைத்தார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி,  ‘நீங்கள் ஆர்வமாக கேட்டுக்கொண்டிருந்த தடுப்பூசி வந்துவிட்டது. பொதுவாக ஒரு தடுப்பு மருந்தை உருவாக்க பல ஆண்டுகள் ஆகும். ஆனால் மிகவும் குறைந்த காலகட்டத்தில், அதுவும் ஒன்றல்ல, இரண்டு தடுப்பு மருந்துகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ளன. பிற தடுப்பூசிகளுக்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

 

இதுபோன்ற பெரிய தடுப்பூசி வழங்கும் திட்டம் வரலாற்றில் இதுவரை நிகழ்ந்ததில்லை. 3 கோடிக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட நாடுகள் நூற்றுக்கணக்கில் உள்ளன. இந்தியோவோ முதற்கட்டத்தில் மட்டும் 3 கோடி மக்களுக்குத் தடுப்பூசி செலுத்தவிருக்கிறது. இரண்டாம் கட்டத்தில் 30 கோடி மக்களுக்குத் தடுப்பூசி வழங்கத் திட்டமிட்டிருக்கிறோம். இரண்டாம் டோஸுக்குப் பிறகுதான் எதிர்ப்புசக்தி உருவாகும் என்பதால் முதல் டோஸ் தடுப்பு மருந்தை எடுத்துக் கொண்டவுடன் முகக் கவசத்தை நீக்குவது, தனிமனித இடைவெளியை மறந்துவிடுவது போன்ற தவறுகளை செய்ய வேண்டாமென மக்களைக் கேட்டுக்கொள்கிறேன். 

 

கடந்த வருடத்தை திரும்பிப் பார்க்கும்போது, தனிமனிதனாக, குடும்பமாக, ஒட்டுமொத்த தேசமாக நாம் நிறைய கற்றுக்கொண்டோம் என்பதை நம்மால் உணர முடியும். இந்த நோய், பலரை தங்கள் குடும்பத்திடம் இருந்து பிரித்திருக்கிறது. தாய்மார்கள் குழந்தைகளைப் பிரிந்து அழுதிருக்கிறார்கள்; மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட முதியவர்களை சந்திக்க முடியாமல் தவித்திருக்கிறார்கள்; உயிரிழந்தவர்களுக்கு முறையான இறுதிசடங்குகள் கூட நம்மால் செய்ய முடியவில்லை.

 

கரோனாவுக்கு எதிரான போரில் உலக நாடுகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இந்தியா திகழ்கிறது. சீனாவில் சிக்கிய தம் குடிமக்களைக் காப்பாற்ற, பிற நாடுகள் தவித்தபோது, நாம் இந்திய குடிமக்களை மட்டுமல்லாது, ‘வந்தே பாரத் மிஷன்’க்கு உட்பட்ட நாடுகளின் குடிமக்களையும் மீட்டுக் கொண்டு வந்தோம். 

 

கடினமான சூழ்நிலையிலும் 150க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு, பாராசிட்டமால், ஹைட்ரோ க்ளோரோ குயின் உள்ளிட்ட மருந்துகளை அனுப்புவது போன்ற  மருத்துவ உதவிகளை இந்தியா செய்திருக்கிறது. நம்மால் முடிந்த அளவிலான அனைத்து உதவிகளையும் பிற நாடுகளுக்கு செய்திருக்கிறோம்.

 

தடுப்பு மருந்து எடுத்துக்கொண்டாலும் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியைப் பின்பற்றுதல் போன்ற கரோனா வழிகாட்டுதல்களை மக்கள் மறந்துவிடக் கூடாது. இரண்டு தடுப்பூசிகளும் பாதுகாப்பானவைதான், வதந்திகளை நம்பாதீர்கள். இந்தியாவின் மருத்துவ கட்டமைப்பை உலகமே வியந்து பாராட்டுகிறது. முதல் மற்றும் இரண்டாம் டோஸ் தடுப்பூசிக்கான மொத்த செலவையும் அரசே ஏற்கும். நாட்டு மக்களின் நலனுக்காக உழைக்கும் முன்களப் பணியாளர்களான சுகாதாரப் பணியாளர்களுக்கே முதலில் தடுப்பூசி வழங்கப்படும்.’ என்று மக்களிடம் உரையாற்றினார் பிரதமர் மோடி.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case against PM Modi adjourned

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு இன்று (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. இந்நிலையில் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.