Prime Minister Modi filed nomination

Advertisment

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டமாக மே 7ஆம் தேதியும் பல்வேறு மாநிலங்களில் நடந்து முடிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அடுத்த கட்டத் தேர்தலான நான்காம் கட்ட வாக்குப்பதிவு, நாடு முழுவதும் 9 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசம் உட்பட மொத்தம் 96 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (13.05.2024) நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் மோடி போட்டியிடும் உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் 7 ஆவது மற்றும் இறுதி கட்டமாக ஜூன் 1 இல் வாக்குப்பதிவு நடக்கிறது. இந்நிலையில் வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி வாரணாசி ஆட்சியர் அலுவலகத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் உடன் இருந்தனர். 3 வது முறையாக பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக பாஜக சார்பில் நேற்று வாரணாசியில் வாகன பேரணி நடைபெற்றது. வாரணாசியின் முக்கிய சாலைகளில் பிரதமர் மோடி உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இணைந்து சாலை பேரணியை நடத்தினர். சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கக் கூடிய மிக நீண்ட சாலைப் பேரணியாக நடைபெற்றது. பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் வாசலில் உள்ள மதன் மோகன் மாளவியா சிலைக்கு மலர்மாலை அணிவித்து பின்னர் இந்தச் சாலை பேரணி தொடங்கியது குறிப்பிடத்தக்கது.