Skip to main content

'குடியரசுத் தலைவர் உடல்நிலையில் முன்னேற்றம்'!

Published on 03/04/2021 | Edited on 03/04/2021

 

president of india ram nath kovind health condition is improve say Rashtrapati Bhavan

 

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு கடந்த மார்ச் 26ஆம் தேதி அன்று காலை, லேசான நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து அவர், மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவரை மருத்துவக் கண்காணிப்பில் வைத்து சிகிச்சை அளித்தனர். இதுகுறித்து மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், குடியரசுத் தலைவரின் உடல்நிலை சீராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

 

அதனைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ராணுவ மருத்துவமனையிலிருந்து டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு இன்று (03.04.2021) இருதய அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்திருந்தனர். 

 

அதன் தொடர்ச்சியாக, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு, பைபாஸ் அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் வெற்றிகரமாகச் செய்தனர். இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கு வாழ்த்தும் கூறியிருந்தார். மேலும், எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனரிடம், குடியரசுத் தலைவரின் உடல்நலம் குறித்து விசாரித்ததாகக் கூறியுள்ள அவர், குடியரசுத் தலைவரின் ஆரோக்கியத்திற்காகவும், அவர் விரைவில் குணமடையவும் பிரார்த்திப்பதாகத் தெரிவித்திருந்தார். 

 

இந்த நிலையில், குடியரசுத் தலைவரின் உடல்நிலை குறித்து குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, குடியரசுத் தலைவர் எய்ம்ஸ் மருத்துவமனையின் ஐ.சி.யூ. பிரிவில் இருந்து சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டார். அவரின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மம்தா பானர்ஜி உடல்நிலை குறித்து மருத்துவர் விளக்கம்!

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Doctor explains Mamata Banerjee's health

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. விரைவில் தேர்தல் அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஒரு சில கட்சிகள் வேட்பாளர்களையும் அறிவித்து வருகின்றன.

அந்த வகையில் மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் 42 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அம்மாநில முதலமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி கடந்த 10 ஆம் தேதி (10.03.2024) வெளியிட்டு 42 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்தார். இதனையடுத்து மம்தா பானர்ஜி தீவிர தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த சூழலில் மம்தா பானர்ஜிக்கு நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். நெற்றியில் இருந்து முகத்தின் வழியாக ரத்தம் வழியும் புகைப்படத்தை திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டது.

Doctor explains Mamata Banerjee's health

அந்த பதிவில், “மம்தா பானர்ஜிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தயவுசெய்து அவரை உங்களின் பிரார்த்தனை மூலம் நல்ல நிலைக்கு வர வையுங்கள்” எனப் பதிவிடப்பட்டிருந்தது. மம்தா பானர்ஜி கொல்கத்தா வூட்பர்ன் பிளாக்கில் உள்ள எஸ்.எஸ்.கே.எம். மருத்துவமனையின் விபத்து மற்றும் அவரச சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மேலும் மம்தா பானர்ஜிக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பலவேறு தலைவர்களும் தங்களது ஆறுதலை தெரிவித்துள்ளனர்.

Doctor explains Mamata Banerjee's health!

இந்நிலையில் எஸ்.எஸ்.கே.எம். மருத்துவமனையின் இயக்குநரும், மருத்துவருமான மணிமோய் பந்தோபாத்யாய் கூறும்போது, “மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று (14.03.2024) இரவு 07:30 மணியளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னால் இருந்து ஏற்பட்ட அதிர்வு காரணமாக வீட்டில் அவர் விழுந்த தடயம் உள்ளது. இதனால் அவரது பெருமூளை அதிர்ச்சி ஏற்பட்டு நெற்றியிலும் மூக்கிலும் கூர்மையான வெட்டு காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. ஆரம்பத்தில் முதலில் மூளை மற்றும் நரம்பியல், மருந்தவியல் மற்றும் இதயவியல் ஆகிய துறையின் தலைமை மருத்துவர்கள் குழுவினரை கொண்டு, உடல் நிலை குறித்து பரிசோதித்து உறுதிபடுத்தப்பட்டது.

Doctor explains Mamata Banerjee's health!
மருத்துவர் மணிமோய் பந்தோபாத்யாய்

நெற்றியில் மூன்று தையல்கள் போடப்பட்டன. ஈ.சி.ஜி., சி.டி. ஸ்கேன் போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மம்தா பானர்ஜி தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அவர் வீட்டிற்கு செல்ல விரும்பினார். இதனால் அவரை தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருவதுடன் மருத்துவர் குழுவின் ஆலோசனையின்படி தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படும். அவருக்கு நாளை (15.03.2024) மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதற்கேற்ப சிகிச்சை அளிப்பது குறித்து முடிவு செய்யப்படும்” எனத் தெரிவித்தார். 

Next Story

"மொத்த செலவையும் நாங்கள் தான் பார்த்துக்கொண்டோம்" - மனோஜ் பாரதிராஜா விளக்கம்

Published on 09/09/2022 | Edited on 09/09/2022

 

manoj bharathiraja explained about his father bharathiraja health condition

 

இயக்குநர் பாரதிராஜா சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு மேல் சிகிச்சைக்காக அமைந்தகரையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது வரை சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே "தான் நலம் பெற்று வருவதாக" ஒரு அறிக்கை வெளியிட்டார் பாரதிராஜா. மருத்துவமனை சார்பிலும் இது தொடர்பாக அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. மேலும் இயக்குநர் சுசீந்திரன் தான் இயக்கும் 'வள்ளி மயில்' படத்தின் படப்பிடிப்பில் இந்த மாதம் இறுதியில் பாரதிராஜா கலந்து கொள்ளவுள்ளார் என சில தினங்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்டிருந்தார். 

 

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாரதிராஜா தற்போது நலமுடன் வீடு திரும்புகிறார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா, "அப்பா நலமாக இருக்கிறார். ரொம்ப ஆக்ட்டிவாக இருக்கிறார், பழைய பாரதிராஜாவை பார்க்கலாம். அதே கிண்டல், கேலி அப்படியே இருக்கிறது. ஒரு இக்கட்டான சூழ்நிலையில் அனுமதித்தோம். இப்போது சிகிச்சை பெற்று ஆரோக்கியத்துடன் இருக்கிறார். 

 

அப்பாவிற்கு நுரையீரலில் கொஞ்சம் பிரச்சனை. அதனால் நண்பர்களின் அறிவுறுத்தலின்படி இந்த மருத்துவமனைக்கு வந்தோம். இதற்கான ஏற்பாடுகள் செய்த ஏ.சி சண்முகம் மற்றும் வைரமுத்து ஆகியோருக்கு நன்றி. மேலும் அப்பாவிற்கு சிகிச்சையளித்த எல்லா மருத்துவர்களும் எங்களுக்கு கடவுள் தான்." என பேசினார். மேலும் தனது தந்தையின் சிகிச்சைக்கு பணம் இல்லாமல் இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அவரது சிகிச்சைக்கான மொத்த செலவும் தங்களது குடும்பத்தினரின் வங்கிக்கணக்கில் இருந்து மட்டுமே செலுத்தப்பட்டிருப்பதாக மனோஜ் பாரதிராஜா தெரிவித்தார்.