Skip to main content

இந்திய பார் கவுன்சிலுக்கு புதிய தலைவர், துணைத்தலைவர் தேர்வு!

Published on 19/02/2022 | Edited on 20/02/2022

 

President of the Bar Council of India elected!

 

அகில இந்திய பார் கவுன்சிலின் தலைவராக உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் மன்னன்குமார் மிஸ்ரா மற்றும் துணைத் தலைவராக சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரபாகரன் ஆகியோர் ஆறாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதனை இந்திய பார் கவுன்சிலின் செயலாளர் ஸ்ரீமாண்டோ சென் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். பார் கவுன்சிலின் புதிய தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில், நாடு முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள், உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்றங்களின் வழக்கறிஞர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். 

 

இந்திய வரலாற்றில் அதிகபட்சமாக நான்கு முறை தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் மூத்த வழக்கறிஞரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராம் ஜெத்மலானி. இந்த சாதனையை கடந்த முறை பெற்ற வெற்றியின் மூலம் முறியடித்த இவர்கள், தற்போது ஆறாவது முறையாக இப்பதவிகளுக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்திய வழக்கறிஞர்களின் பிரதிநிதிகளாக அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு செயல்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விஞ்ஞானிகளுக்கு வழக்கறிஞர்கள் சங்கம் பாராட்டு

Published on 04/10/2023 | Edited on 04/10/2023

 

Lawyers' Association praises  isro scientists in Delhi

 

உலகிற்குத் தமிழால் பெருமை சேர்த்த தமிழ் விஞ்ஞானிகள், வீரமுத்து வேல் (திட்ட இயக்குநர் சந்திரயான் மூன்று விண்கலம்) மற்றும் நிகர் ஷாஜி (திட்ட இயக்குநர் ஆதித்யா எல் 1 விண்கலம்) ஆகியோர் இன்று தில்லி சென்றனர். அவர்களை டெல்லி தமிழ் வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் ராம் சங்கர் ராஜா நேரில் சந்தித்து அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

 

தமிழ் உலகம் மட்டுமல்லாமல் விண்ணுலகமும் போற்றும் இடத்தில் தமிழ் விஞ்ஞானிகள் இருவரும் இடம்பெற்று தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளதாக ராம் சங்கர் வெகுவாகப் பாராட்டினார். இந்திய அரசின் விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் மிகப்பெரிய இயக்குநர் பொறுப்பில் இருக்கும் இந்த இருவரும் தமிழர்கள். சந்திரனுக்கு அனுப்பப்பட்ட ‘சந்திரயான் - 3’ என்ற விண்கலமும் சூரியனுக்கு அனுப்பப்பட்ட ‘ஆதித்யா எல் -1’ என்ற விண்கலமும் உருவாக, நடைமுறைப்படுத்த, வெற்றிகரமாக விண்ணில் செலுத்த அமைக்கப்பட்ட விஞ்ஞானிகள் குழுவிற்கு இவர்கள் இருவரும் இயக்குநர்கள் ஆவார்கள். 

 

வீர முத்துவேல் என்ற விஞ்ஞானி தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். விஞ்ஞானி நிகர் ஷாஜி தமிழகத்தில் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இருவரும் உலகின் மிகப்பெரிய விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் பணிபுரிகிறார்கள் என்பது தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல உலகில் உள்ள அத்தனை தமிழர்களுக்கும் பெருமை. இந்த விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இந்திய அரசு நிறுவனம். விண்வெளி ஆராய்ச்சியில் உலக அளவில் நாம் இப்போது முன்னிலை பெற்றுள்ளதற்கு இவர்கள் இருவரின் பங்களிப்பு மிகவும் போற்றத்தக்கது. சந்திரயான் மற்றும் ஆதித்யா விண்கலங்கள் இந்தியாவையும் இந்தியப் பொருளாதாரத்தையும், முதலீட்டையும் அதிகரிக்கும் என்றும் வருங்காலத்தில் அதிக பலன்கள் தரும் என்றும் இருவரும் கூறினர்.

 

உலக நாடுகள் இந்தியாவின் இந்த இரண்டு சாதனைகளை உற்று நோக்கிப் பார்த்து வருவதாகவும் நமது விஞ்ஞானிகளின் அறிவுத்திறனைக் கண்டு வியப்பதாகவும் கூறினார்கள். சந்திரயான் திட்ட இயக்குநர் வீரமுத்து வேல் சந்திரனுக்கு சென்றுள்ள விண்கலம் ‘சந்திரயான் - 3’  நிலவின் மண் மற்றும் இதர கனிம வளங்களை ஆராய்ந்து எதிர்காலத்தில் நிலவில் மனிதர்கள் வாழ்வதற்கான ஆதாரங்களைச் சேகரித்து வழங்கும் என்று கூறினார். அதேபோல் சூரியனுக்கு சென்றுள்ள ‘ஆதித்யா எல் -1’ விண்கலம் சூரியனின் வட்டப் பாதைகளை ஆராய்ந்து, அதன் கதிர்வீச்சுகளை ஆய்வு செய்து உலக வெப்ப மயமாதல் போன்றவற்றை ஆராய்ந்து சொல்லும் என்று கூறினார். 

 

தமிழகத்தின் இரண்டு தலைசிறந்த விஞ்ஞானிகள் நீடுழி வாழவும் இன்னும் பல்வேறு சாதனைகள் செய்யவும் இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் தமிழ் மக்களுக்கும் பெருமை சேர்க்கும் விதமாக மேலும் மேலும் உயர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவதாகச் சொல்லி நேரில் சென்று டெல்லி தமிழ் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் ராம் சங்கர் பாராட்டினார். அவருடன் டெல்லி தமிழ்ச் சங்க செயலாளர் முகுந்தன் அவர்களும் கலந்து கொண்டு அவர்களை டெல்லி தமிழ்ச் சங்கத்தின் சார்பாகவும் வாழ்த்தினார். 

 

 

Next Story

ஒன்றிய அரசைக் கண்டித்து ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம் போராட்டம் (படங்கள்)

Published on 31/08/2023 | Edited on 31/08/2023

 

இந்தி திணிப்பு, அதிகாரக் குவிப்பு, சர்வாதிகாரப் போக்குடைய ஒன்றிய அரசைக் கண்டித்து சென்னை உயர்நீதிமன்ற வாயிலில் சமத்துவ மற்றும் ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஒரு நாள் தொடர் முழக்கப் போராட்டம் நடந்தது.