Skip to main content

"அவர்களுக்கு தேவையானதை அரசு வழங்கவேண்டுமென்று பிரார்த்திக்கிறேன்" - ஆனந்த் மஹிந்திரா!

Published on 01/06/2021 | Edited on 01/06/2021

 

ananad mahindra

 

இந்தியாவில் கரோனா தடுப்பூசிகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், வெளிநாடுகளிலிருந்து தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்திய அரசு மட்டுமின்றி, இந்தியாவில் உள்ள மருந்து நிறுவனங்களும் இதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

 

அந்தவகையில், இந்திய மருந்து நிறுவனமான சிப்லா, கரோனா தடுப்பூசிக்காக மாடர்னா தடுப்பூசி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யவுள்ளதாகவும், இதற்காக சிப்லா முன்பணமாக 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை மாடர்னா நிறுவனத்துக்கு வழங்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. மேலும், இறக்குமதி செய்யப்படும் மாடர்னா தடுப்பூசிகளுக்கு விலைக் குறைப்பு, உள்நாட்டுச் சோதனைகள், அடிப்படை சுங்க வரி ஆகியவற்றிலிருந்து விலக்கு கேட்டும், நஷ்ட ஈடு தொடர்பான நடைமுறைகள் குறித்தும் சிப்லா நிறுவனம் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அத்தகவல்கள் தெரிவித்தன. 

 

இந்நிலையில், மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, இந்த தகவலை வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இது சிறப்பான செய்தி. சிப்லா மற்றும் மாடர்னாவுக்கு தேவையான விலக்குகளை அரசாங்கம் விரைவாக வழங்க வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். உலகில் தயாரிக்கப்பட்ட பலவிதமான தடுப்பூசிகளை அதிகமாக விநியோகம் செய்வதும், சிப்லா போன்ற புகழ்பெற்ற நிறுவனங்களுமே மூன்றாவது அலை மட்டுமல்லாமல் வருங்கால கரோனா அலைகளிலிருந்தும் நமக்கான ஒரே உண்மையான பாதுகாப்பாகும்" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“அவர்களைப் பின்பற்றினால் இந்தியா வல்லரசாகும்...” - ஹிட் பட பிரபலங்களுடன் ஆனந்த் மஹிந்த்ரா

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
anand mahindra about 12th fail movie

விது வினோத் சோப்ரா இயக்கத்தில் விக்ராந்த் மாஸ்ஸி, மேதா சங்கர், ஆனந்த் வி ஜோஷி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு அக்டோபர் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 12த் ஃபெயில். தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் கன்னடா மொழிகளில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இக்கதை மனோஜ்குமார் ஷர்மா ஐபிஎஸ் அதிகாரி மற்றும் அவரது மனைவி ஷ்ரத்தா ஜோஷி ஐஆர்எஸ்ஸின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்டது. பின்பு கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி ஓடிடியில் இப்படம் வெளியானது. அதன் பிறகு அனைத்து தரப்பு ரசிகர்களிடத்திலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. 

இந்த நிலையில், மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, இப்படத்தின் மூலம் பிரபலமான நிஜ தம்பதிகள் மனோஜ்குமார் ஷர்மா ஐபிஎஸ் மற்றும் அவரது மனைவி ஷ்ரத்தா ஜோஷி ஐஆர்எஸ் உள்ளிட்டோரை சந்தித்து ஆட்டோகிராஃப் பெற்றுள்ளார். இது குறித்து அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “நான் பெருமையுடன் வைத்திருக்கும் அவர்களின் ஆட்டோகிராஃப்களை, நான் அவர்களிடம் கேட்டபோது வெட்கப்பட்டார்கள். ஆனால் அவர்கள்தான் உண்மையான ஹீரோக்கள். 

படத்தின் கதை அவர்களின் உண்மைக் கதையை தழுவியதாக அறிந்தேன். அவர்கள் நேர்மையான ஒருமைப்பாட்டு தத்துவத்தை தொடர்ந்து கடைப்பிடிக்கின்றனர். இந்தியா உலக வல்லரசாக மாற வேண்டுமானால், அதிகமான மக்கள் அவர்களின் வாழ்க்கை முறையைப் பின்பற்றினால் அது வேகமாக நடக்கும். எனவே அவர்கள்தான் இந்த நாட்டின் உண்மையான பிரபலங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மஹிந்திராவின் பரிசுக்கு பின் இருக்கும் கதை! 

Published on 29/08/2023 | Edited on 29/08/2023

 

The story behind Mahindra's prize!

 

அசர்பைஜானில் செஸ் உலகக் கோப்பை போட்டி நடைபெற்று முடிந்தது. இந்தப் போட்டியில், இந்தியா சார்பில்  தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் வீரரான பிரக்ஞானந்தா பங்கேற்று இறுதிப் போட்டி வரை முன்னேறினார். இறுதிப் போட்டியில் பிரக்ஞானந்தா உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டார். 

 

உலக அளவில் உற்றுநோக்கப்பட்ட இந்த இறுதி ஆட்டத்தில் கார்ல்சனுக்கு கடுமையான எதிர் ஆட்டத்தை வழங்கினார் பிரக்ஞானந்தா. இறுதிப் போட்டியின் இரண்டு ஆட்டங்களும் சமனில் முடிந்தது. இதனால், வெற்றியைத் தீர்மானிக்கும் டை பிரேக்கர் முறையில் போட்டி நடைபெற்றது. அந்த டை-பிரேக்கர் சுற்றிலும் கடும் போட்டி நிலவியது. இறுதியில்  பிரக்ஞானந்தா இரண்டாம் இடத்தைப் பெற்றார். 

 

உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டு அவர் எளிதில் வென்றுவிடாதபடி கடுமையான ஆட்டத்தை வழங்கிய தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரக்ஞானந்தாவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடி உட்பட அனைவரும் தங்கள் வாழ்த்தை தெரிவித்தனர். இந்நிலையில் பிரக்ஞானந்தாவுக்கு உறுதுணையாக இருந்த அவரது பெற்றோருக்கு தொழில் அதிபர் ஆனந்த் மஹிந்திரா, தனது நிறுவனத்தின் எலக்ட்ரிக் கார் ஒன்றை பரிசாக அறிவித்துள்ளார். 

 

முன்னதாக கடந்த 25ம் தேதி ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் பிரக்ஞானந்தாவுக்கு தனது வாழ்த்தை தெரிவித்தார். அந்த வாழ்த்து பதிவுக்கு கீழ் ஒருவர், ‘அவருக்கு (பிரக்ஞானந்தாவுக்கு) மஹிந்திரா காரை பரிசளிக்க வேண்டும்’ எனத் தெரிவித்திருந்தார். 

 

இந்நிலையில், தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த நபருக்கு பதில் அளித்திருக்கிறார். அந்தப் பதிவில், “உங்கள் உணர்வைப் பாராட்டுகிறேன். உங்களைப் போன்ற பலர், எனக்கு ஒரு கார் பரிசளிக்குமாறு வற்புறுத்துகிறார்கள். ஆனால் எனக்கு இன்னொரு யோசனை இருக்கிறது. 

 

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை செஸ் விளையாட்டிற்கு அறிமுகப்படுத்தி அவர்களை இந்த மூளைக்கூறு சார்ந்த விளையாட்டை தொடர அவர்களுக்கு ஆதரவளிக்க, ஊக்குவிக்க விரும்புகிறேன். (வீடியோ கேம்களின் பிரபல்யம் அதிகரித்துள்ள போதிலும்!). 

 

இது இ.வி. (எலக்ட்ரானிக்) களைப் போலவே நமது உலகத்தின் சிறந்த எதிர்காலத்திற்கான முதலீடு. எனவே, பெற்றோருக்கு ‘எக்ஸ்.யு.வி 400 இ.வி.’யை பரிசளிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அவரின் பெற்றோரான நாகலட்சுமி மற்றும் ரமேஷ்பாபு, தங்கள் மகனின் ஆர்வத்தை வளர்த்ததற்காகவும், அவருக்குத் தங்களின் அயராத ஆதரவை வழங்கியதற்காகவும் எங்கள் நன்றிக்கு உரியவர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.