Skip to main content

பிரசாந்த் கிஷோரை வெளுத்து வாங்கிய மோடி! பீஹார் அரசியலில் பரபரப்பு

Published on 31/12/2019 | Edited on 31/12/2019

 

பாஜக தலைவர் சுசில்குமார்மோடிக்கும் தேர்தல் வியூக வல்லுனர் பிரசாந்த் கிசோருக்கும் இடையே நடக்கும் மோதல்கள் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.  
           

பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. மாநில முதல்வராக ஐ.ஜ.த.தலைவர் நிதிஷ்குமாரும், துணை முதல்வராக பீகார் மாநில பாஜக தலைவர் சுசில்குமார் மோடியும் பதவி வகித்து வருகின்றனர். பீகார் மாநில சட்டசபை தேர்தல் 2020-ல் நடக்கவிருக்கிறது. 

 

sushil kumar modi  - prashant kishor


           

இந்த நிலையில், ’’ வருகிற சட்டமன்ற தேர்தலில் பாஜகவை விட ஐக்கிய ஜனதா தளம் அதிக இடங்களில் போட்டியிட வேண்டும். கடந்த தேர்தலைப் போல 50:50 என்கிற சதவீத கணக்கில் போட்டியிடக் கூடாது. இதனை நிதிஷ்குமாரிடம் வலியுறுத்துவேன் ’’ என சமீபகாலமாக சொல்லி வருகிறார் பிரசாந்த் கிஷோர்.  இதே கருத்தை எதிரொலிக்கும் வகையில், ’’ பாஜகவை விட அதிக சீட்டுகளை ஐக்கிய ஜனதா தளம் பெற வேண்டும் ‘’ என இன்று டிவிட்டரில் பதிவு செய்திருக்கிறார் கிஷோர். 


          

 

இந்த பதிவு, பாஜக தலைவர்களை கொந்தளிக்க வைத்திருக்கும் நிலையில், ‘’ பிரதமர் மோடியின் தலைமையிலான கூட்டணி 2020 தேர்தலை சந்திக்கும். அதைப்பற்றி எந்த டேட்டா திரட்டுபவர் சொல்வதும் எடுபடாது ‘’ என பிரசாந்த் கிஷோரை கடுமையான வார்த்தைகளில் தாக்கி அதே டிவிட்டரில் பதிவு செய்துள்ளார் துணை முதல்வர் சுசில்குமார்மோடி. உடனே இதற்கு பதில் சொல்லும் முகமாக, ‘’ எந்த தலைமையின் கீழ் கூட்டணி அமையும் என்பதை பீஹார் மக்கள்தான் தீர்மானிப்பார்களே தவிர, மேலே அமர்ந்துள்ள எந்த ஒரு தலைவரோ அல்லது தேர்தலில் தோற்றும் துணைமுதல்வராக உட்கார்ந்திருக்கும் சுசில்குமார்மோடியோ அல்ல ‘’ என பிரதமர் மோடியையும் மாநில தலைவர் மோடியையும் எதிர்தாக்குதல் நடத்தியுள்ளார் பிரசாந்த் கிஷோர். இதற்கும் அசராத சுசில்குமார், ‘’ கூட்டணிக்குள் குழப்பத்தை உண்டுபண்ணி குளிர் காய்வதுதான் கொள்கையில்லாத கூலிக்காக வேலை செய்கிற நாடோடியான இந்த டேட்டா திரட்டியின் வேலை ‘’ என ட்வீட் செய்திருக்கிறார். இவர்களின் இந்த அதிரடி ட்விட்டர் தாக்குதல்கள் பீஹார் அரசியலில் மட்டுமல்ல தேசிய அளவிலும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 


             

 

இந்த மோதலுக்கான பின்னணி குறித்து விசாரித்தபோது, ‘’ நாடாளுமன்றத்துக்கு 2024-ல் நடக்கும் தேர்தலின் போது மாநில கட்சிகளின் ஆதரவுடன் பிரதமராக வேண்டும் என கனவு கண்டு வருபவர் பிரசாந்த் கிஷோர். அதற்காகத்தான் ஒவ்வொரு மாநிலத்திலும் செல்வாக்குப் பெற்ற கட்சிகளுடன் தனது தொழில் உறவுகளை வளர்த்துக்கொண்டு வருகிறார். அந்த வகையில் நிதிஷ்குமாருடன் நெருங்கிய நட்பில் இருப்பவர் பிரதமர் மோடி. அந்த நட்பிலும் ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணியிலும் விரிசல் உண்டாக்க வேண்டும் என்பதே அவரது திட்டம். முதல் கட்டமாக பாஜக கூட்டணியிலிருந்து ஐக்கிய ஜனதா தளத்தை வெளியேற்ற வேண்டும் என்கிற திட்டத்தில் கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த, அதிக இடங்களில் ஐக்கிய ஜனதா தளம் போட்டியிட வேண்டும் என்கிற தூண்டிலை வீசி வருகிறார். பிரசாந்த் கிஷோரின் தூண்டிலில் நிதிஷ்குமார் சிக்குவாரா?என்பது போகப்போகத்தான் தெரியும். பிரசாந்த் கிஷோரின் நோக்கத்தையும் திட்டத்தையும் அறிந்துகொண்டதால் அவருக்கு பதிலடி தந்து வருகிறார் பாஜக தலைவர் சுசில்குமார் மோடி ‘’ என சுட்டிக்காட்டுகிறார்கள்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார். 

Next Story

“பா.ஜ.கவை விட ஆபத்தானவர் நிதிஷ்குமார்” - மல்லிகார்ஜுன கார்கே

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Mallikarjuna Kharge says Nitish Kumar is more like BJP

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இதற்கிடையே, பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் உள்ளன. அதே போல், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது.

இந்த நிலையில், நாட்டில் ஜனநாயகத்தை காப்பாற்ற தற்போது நடைபெற்று வரும் தேர்தல்கள் மிகவும் முக்கியமானவை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பீகார் மாநிலத்தில் உள்ள கிஷன்கஞ்ச் மற்றும் கதிஹார் தொகுதிகளில் நேற்று (19-04-24) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது, “மோடி சமீபகாலமாக அரசியல் சாசனத்தின் மீது மிகுந்த மரியாதையைக் காட்டி வருகிறார். அவர் சொல்வதையே அவர் கடைப்பிடிக்கிறார் என்றால், அரசியல் சாசனத்தை மாற்றுவோம் என பேசி வரும் பாஜக தலைவர்கள் எப்படி தப்பிக்க முடிகிறது? அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் எந்தப் பங்கையும் வகிக்காத ஆர்.எஸ்.எஸ் திட்டத்தை செயல்படுத்த பா.ஜ.க களமிறங்கியது. நாட்டில் ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனத்தை காப்பாற்ற தற்போது நடைபெறும் தேர்தல்கள் முக்கியமானவை. நாம் தோல்வியுற்றால், நமது வருங்கால சந்ததியினர் பாதிக்கப்படுவார்கள்.

எங்கள் கூட்டணியில் போட்டியிடும் தேஜஸ்வி யாதவ், நிதிஷ்குமாரின் துரோகத்தை பலமுறை கூறி புலம்பியுள்ளார். நான் அதை ஒரு நல்ல அதிர்ஷ்டம் என்று சொல்கிறேன். பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்ஸை விட நிதிஷ் குமார் போன்றவர்கள் ஆபத்தானவர்கள். நிதிஷ் குமாரிடம் கொள்கைகள் இல்லை. அவர் அதிகாரத்திற்காக மட்டுமே கவலைப்படுகிறார்” என்று கூறினார்.