ஒரு சிறிய பிழையால் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட தபால்காரர் ஒருவர், 32 ஆண்டுகளாக சட்டப் போராட்டம் நடத்தி நீதியைப் பெற்றுள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலம் பெத்தூல் பகுதியைச் சேர்ந்தவர் மான்கரம் என்ற தபால்காரர். கடந்த 1983ஆம் ஆண்டு இவரது அலுவலகத்தில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அதில், மான்கரம் கிளை பதிவேட்டில் ரூ.3,596 வைப்புத் தொகையைப் பதிவு செய்ய தவறி உள்ளார் என்பது தெரியவந்தது. ஆனால், அந்த தொகை அரசாங்க கருவூலத்தில் முறையாக டெபாசிட் செய்யப்பட்டிருந்தது. மேலும், கணக்கு வைத்திருப்பவரின் பாஸ்புக்கிலும் பதிவிடப்பட்டிருந்தது. எந்தவொரு நிதி முறைகேடு இல்லாத போதிலும், மான்கரம் செய்த சிறிய பிழையால் அது குற்றவியல் மோசடியாகக் கருதப்பட்டு நீதிமன்றம் வரை சென்றுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம், கடந்த 1993ஆம் ஆண்டில் மான்கரமை குற்றவாளி என்று தீர்ப்பளித்து அவருக்கு சிறைத்தண்டனையும் ரூ.3,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டது. தன் மீது எந்த தவறும் இல்லாததால் எந்தவித தயக்கமும் இல்லாமல், தனக்கு விதிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மான்கரம் அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஆனால், மான்கரமின் மேல்முறையீட்டு மனுவை ரத்து செய்த அமர்வு நீதிமன்றம், விசாரணை நீதிமன்றம் விதித்த தண்டனையை உறுதி செய்தது. இருப்பினும், மனம் தளராத மான்கரம் நீதியைத் தேடி மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்திற்கு சென்று சட்டப் போராட்டம் நடத்தினர். மான்கரம் அளித்த மேல்முறையீட்டு மனு தொடர்பான வழக்கு மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது. 

இறுதியாக இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.பட்டி, கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து மான்கரத்தை மோசடி வழக்கில் இருந்து விடுவித்தார். இது குறித்து நீதிபதி தெரிவிக்கையில், ‘இந்த செயல் ஒரு குற்றவியல் குற்றமல்ல, சிறிய தவறு மட்டுமே. இது போன்ற தீர்ப்புகளை வழங்குவதற்கு முன்பு, ஒரு செயல் குற்ற நோக்கத்துடன் செயல்பட்டதா? என்பதை கீழமை நீதிமன்றங்கள் மதிப்பிட வேண்டும்’ என்று கூறினார். 1993ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து 32 ஆண்டுகளாக சட்டப் போராட்டம் நடத்தி தபால்காரர் மான்கரம் நீதியை பெற்றியிருப்பது காலம் தவறினாலும் முறையான நீதி ஒரு நாள் கண்டிப்பாக கிடைக்கும் என்பதை காட்டுகிறது.