Poorly laid road; Atrocious protest by burning a motorcycle

Advertisment

புதுச்சேரி அரசின் பொதுப்பணித்துறை சார்பில் கரிக்கலாம்பாக்கம் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுமார் ரூ 4.47 லட்சம் செலவில் தார் சாலை அமைக்கும் பணி நடந்தது. இந்த பணியில் முறைகேடு நடந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி கரிக்கலாம்பாக்கம் - மடுகரை ரோடு பகுதியை சேர்ந்த ஜூஸ் கடை உரிமையாளரும், சமூக ஆர்வலருமான தணிகாசலம் என்பவர் அதிகாரிகளுக்கு பல முறை புகார் அளித்தார். ஆனால் எந்த பதிலும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் புகார் அளித்தார். இந்த புகாருக்கான விளக்கம் சில தினங்களுக்கு முன்பு கிடைத்தது. ஆனால் அதில் அவருக்கு திருப்தி ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. தரமற்ற சாலை போட்டதை பொதுமக்களுக்கு உணர்த்தும் விதமாகவும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் தணிகாசலம் கரிக்கலாம்பாக்கம் 4 முனை சந்திப்பில் தனது சொந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி பெட்ரோல் ஊற்றி கொளுத்தி போராட்டம் நடத்தினார். பலரும் இந்த வாகனம் எரிவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். தகவலறிந்த கரிக்கலாம்பாக்கம் புறக்காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மோட்டார் சைக்கிள் எரித்த தமிழ்வாணனை கைது செய்தனர். மேலும் இது சம்பந்தமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

முறைகேடு நடந்ததை மக்களுக்கு வெளிப்படுத்திய தணிகாசலத்தை கைது செய்ததற்கு பல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.