Skip to main content

இளைஞரை பெட்ரோல் ஊற்றி எரித்த விவகாரம்: பாஜக மாநில அமைப்பாளர் நீக்கம்!

Published on 31/07/2021 | Edited on 31/07/2021

 

pondicherry petrol bunk issue bjp member dismissed from party

 

புதுச்சேரி அருகே பெட்ரோல் ஊற்றி இளைஞரை எரித்த வழக்கில் கைதான புதுச்சேரி பாஜக வணிகப் பிரிவு மாநில அமைப்பாளர், பாஜகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

 

திருச்சி மாவட்டம், பிராட்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். 31 வயதாகும் சதீஷ்குமார், கூலித் தொழிலாளியாக தனது வாழ்க்கையை நடத்திவருகிறார். இவர் கடந்த 25ஆம் தேதி புதுச்சேரிக்கு வேலை தேடிச் சென்றுள்ளார். அப்போது புதுச்சேரி, மேட்டுப்பாளையம் நான்குமுனை சந்திப்பில் உள்ள பெட்ரோல் பங்க்கின் ஓரமாக சதீஷ்குமார் நள்ளிரவு தூங்கிக்கொண்டிருந்தார். 

 

அப்போது பெட்ரோல் பங்க்கின் உரிமையாளரும், பாரதிய ஜனதா கட்சியின் வணிகப் பிரிவு மாநில அமைப்பாளருமான ராஜமவுரியா உள்ளிட்ட 7 பேர் சதீஷ்குமாரை விசாரித்துள்ளனர். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் நடந்துள்ளது. இதன் காரணமாக சதீஷ்குமாரை தாக்கி, பெட்ரோலை ஊற்றித் தீ வைத்ததாக கூறப்படுகிறது.

 

இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர், அவர் மீது பரவிய தீயை அணைத்து, தீக்காயங்களுடன் அவதிப்பட்ட சதீஷ்குமாரை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்த மேட்டுப்பாளையம் போலீசார், ராஜமவுரியா, அவரது தம்பி உள்ளிட்ட நான்கு பேரை கைதுசெய்து, காலாப்பட்டு சிறையில் அடைத்துள்ளனர்.

 

இந்த நிலையில், புதுச்சேரி மாநில பாஜக பொதுச் செயலாளர் மோகன் குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பாஜகவின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு மற்றும் மாநிலத் தலைவர் சாமிநாதன் ஆகியோருடன் இந்த சம்பவம் குறித்து ஆலோசனை செய்தோம். ராஜமவுரியா, கட்சிக்கு அவப்பெயர் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால், அவர் பாஜகவின் அமைப்பாளர் பதவியிலிருந்தும், உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுகிறார்” என்று தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.