/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/poli sm_0.jpg)
முதல்வருக்கு எதிராக முகநூலில் கருத்து தெரிவித்த காவலர் ஒருவரை மாநகர காவல் ஆணையர் பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ்-ஜனதாதளம் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக ஜனதாதளம் கட்சியை சேர்ந்த குமாரசாமி உள்ளார். தேர்தல் பிரசாரத்தின்போது, தான் முதல்வராக பதவி ஏற்ற 24 மணி நேரத்தில் விவசாய கடனை தள்ளுபடி செய்வதாக குமாரசாமி கூறியிருந்தார். ஆனால் அவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற தவறிவிட்டார் என விவசாய சங்கத்தினரும், பா.ஜ.கவினரும் குற்றம்சாட்டினர்.
இந்த நிலையில் தார்வார் மாவட்டம் உப்பள்ளி டவுன் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வரும், அருண் டோலின் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் முதல்வருக்கு எதிராக கருத்து தெரிவித்து இருந்தார். அதில், விவசாய கடனை தள்ளுபடி செய்யாத குமாரசாமி முதல்வர் பதவியை ராஜினாமா செய்வது எப்போது? என அவர் தனது பதிவில் குறிப்பிட்டு இருந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த தார்வார்-உப்பள்ளி மாநகர காவல் ஆணையர் எம்.என்.நாகராஜூ, அருண் டோலினை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். இதுதொடர்பாக விளக்கம் கேட்டும் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அருண் டோலின் இதற்கு முன்பும் இதுபோல் குமாரசாமி அரசை விமர்சித்து முகநூலில் சில கருத்துகளை பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us