Skip to main content

திருக்குறளை மேற்கோள் காட்டிய பிரதமர் நரேந்திர மோடி!

Published on 25/02/2021 | Edited on 25/02/2021

 

PM NARENDRA MODI SPEECH WITH JIPMER AT PUDUCHERRY

 

புதுச்சேரியில் உள்ள ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (ஜிப்மர்) நடைபெற்ற விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, காரைக்கால் மாவட்டத்தை உள்ளடக்கிய விழுப்புரம் - நாகை இடையே ரூபாய் 2,426 கோடி மதிப்பில் 56 கி.மீ. தூரம் அமையும் நான்கு வழிச்சாலைப் பணிக்கு (NH45A) காணொளி மூலம் அடிக்கல் நாட்டினார்.

PM NARENDRA MODI SPEECH WITH JIPMER AT PUDUCHERRY

 

அதேபோல், ஜிப்மர் மருத்துவக் கல்லூரியின் காரைக்கால் கிளையில் ரூபாய் 491 கோடி மதிப்பிலான புதிய கட்டடத்திற்கும், சாகர்மாலா திட்டத்தின் கீழ் ரூபாய் 44 கோடியில் அமையவுள்ள சிறிய துறைமுகத்திற்கும், இந்திரா காந்தி விளையாட்டுத் திடலில் ரூபாய் 7 கோடியில் செயற்கை ஓடுதளம் அமைக்கவும் அடிக்கல் நாட்டிய பிரதமர், ஜிப்மரில் ரூபாய் 28 கோடியில் ஆராய்ச்சிக் கூடத்துடன் கூடிய ரத்த வங்கியையும், லாஸ்பேட்டையில் ரூபாய் 12 கோடியில் 100 படுக்கைகளுடன் கூடிய வீராங்கனைகளுக்கான விடுதியையும் காணொளி மூலம் திறந்து வைத்தார். மேலும், புதுச்சேரியில் ரூபாய் 15 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பாரம்பரிய மேரி கட்டடத்தையும் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். புதுச்சேரி வரலாற்றின் அடையாளமான மேரி கட்டடம் பிரெஞ்ச் கட்டட கலைப் பாணியில் கட்டப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி துணைநிலை (பொறுப்பு) ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

PM NARENDRA MODI SPEECH WITH JIPMER AT PUDUCHERRY

 

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "புதுச்சேரியில் வாழும் மக்கள் பல மொழிகளைப் பேசினாலும் ஒற்றுமையின் அடையாளமாக திகழ்கின்றனர். புதுச்சேரி மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. காரைக்கால் - நாகை தேசிய நெடுஞ்சாலை மும்மதங்களின் முக்கியத் தளங்களை இணைக்கும். புதிய நான்கு வழிச்சாலை, புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும். கிராமப்புற, கடற்கரை இணைப்பை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

PM NARENDRA MODI SPEECH WITH JIPMER AT PUDUCHERRY

 

புதுச்சேரி மண் பன்முகத்தன்மையின் அடையாளம்; இங்கிருந்து பல்வேறு புரட்சியாளர்கள் வந்துள்ளனர். புதுச்சேரியின் புனிதத்தன்மை என்னை மீண்டும் இங்கே அழைத்து வந்திருக்கிறது. புதிய நான்கு வழிச்சாலை மூலம் காரைக்கால் மாவட்டத்தில் பொருளாதாரம் மேம்படும். நான்கு வழிச்சாலையால் திருநள்ளாறு சனீஸ்வரர் கோயில், வேளாங்கண்ணி பேராலயத்திற்கு எளிதாகச் செல்லலாம். சுகாதாரத்துறையில் முதலீடு செய்யும் நாடுகள் பிரகாசிக்கும். சுகாதாரத்துறைக்கு மத்திய அரசு பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. புதுச்சேரிக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும்" என்றார். 

PM NARENDRA MODI SPEECH WITH JIPMER AT PUDUCHERRY

 

அதைத் தொடர்ந்து பேசிய பிரதமர், "மாணவர்களுக்கு கல்விதான் சிறந்த செல்வம்" என்பதற்கு 'கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை' என்ற திருக்குறளை மேற்கோள்காட்டினார்.

 

இதனிடையே, புதுச்சேரியில் பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கருப்புக்கொடி காட்டி, கருப்பு பலூன் பறக்கவிட்ட சுமார் 30 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புதுச்சேரி சிறுமி கொலை; விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Puducherry girl incident File charge sheet soon

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போன நிலையில் ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞர் கருணாஸ் மற்றும் இதற்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சிறுமி கொலை தொடர்பாகப் பாலியல் வன்கொடுமை, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை வழக்கு மற்றும் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதாவது இந்த சம்பவத்தில் கைதான குற்றவாளிகள் கருணாஸ் மற்றும் விவேகானந்தன் ஆகியோர் மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் வழக்கில் விரிவான விசாரணை நடத்த ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு ஒன்றும் அமைத்து உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்தும் உடற்கூறாய்வு அறிக்கையில் உறுதியாகியுள்ளது. எனவே இந்த வழக்கு தொடர்பாக போக்சோ நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

உறுதியளித்த அமைச்சர்; தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Minister of Assurance; Tamil Nadu government action

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. 

Minister of Assurance; Tamil Nadu government action
கோப்புப்படம்

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்தார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் நேற்று உறுதியளித்திருந்தார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். 

Minister of Assurance; Tamil Nadu government action

இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைக்குழு அமைக்கப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோருக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதி அளித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.