PM Modi's says Blood doesn't flow in veins, only vermilion flows

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறின. இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், தாக்குதல்களை நிறுத்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். அதனை தொடர்ந்து இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்துவதாக அறிவித்தது. இதனால், இரு நாடுகளிடையே தற்போது அமைதி நிலவி வருகிறது.

இந்த நிலையில், நரம்புகளில் ரத்தம் ஓடவில்லை, சிந்தூர் தான் ஓடுகிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் பிகனேரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், “பாரத மாதாவின் சேவகனான மோடி, நெஞ்சை நிமிர்த்தி இங்கே நிற்கிறேன். ஏப்ரல் 22இல் நடைபெற்ற பஹல்காம் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக, பயங்கரவாதிகளில் 9 பெரிய முகாம்களை 22 நிமிடங்களில் அழித்தோம். குங்குமம் துப்பாக்கிப் பொடியாக மாறும்போது என்ன நடக்கும் என்பதை இந்த நாடும் மற்றும் உலகில் உள்ள எதிரிகள் பார்த்திருக்கிறார்கள். எனது நரம்புகளில் ரத்தம் ஓடவில்லை, சிந்தூர் (குங்குமம்) தான் ஓடுகிறது.

Advertisment

பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட இந்தியா ஒன்றுபட்டுள்ளது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் 140 கோடி இந்தியர்களைத் தாக்கியது. பயங்கரவாதத்தின் மையத்தில் நாங்கள் தாக்குதல் நடத்தினோம். அரசாங்கம் இராணுவத்திற்கு சுதந்திரம் அளித்தது. அதனால், 3 ஆயுதப்படைகளும் சேர்ந்து ஒரு சக்கர வியூகத்தை உருவாக்கி பாகிஸ்தானை மண்டியிட வைத்தனர். இந்த துணிச்சலான ராஜஸ்தான் நிலம், நாட்டையும் அதன் குடிமக்களையும் விட பெரியது எதுவுமில்லை என்பதை நமக்குக் கற்பிக்கிறது. ஏப்ரல் 22 ஆம் தேதி, பயங்கரவாதிகள் நம் சகோதரிகளின் நெற்றியில் இருந்த குங்குமப்பூவை, அவர்களின் மதத்தைப் பற்றிக் கேட்டு அழித்தார்கள். அந்தத் தோட்டாக்கள் பஹல்காமில் சுடப்பட்டன, ஆனால் அந்தத் தோட்டாக்கள் 140 கோடி நாட்டு மக்களின் இதயங்களைத் துளைத்தன. இதன் பிறகு, நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் ஒன்றுபட்டு பயங்கரவாதிகளை அழிப்போம் என்று தீர்மானித்தனர். அவர்கள் கற்பனை செய்வதை விட அதிகமாக அவர்களைத் தண்டிப்போம்.

பாகிஸ்தானுடன் வர்த்தகமோ பேச்சு வார்த்தையோ கிடையாது. மக்கள் ஆசியாலும், ராணுவத்தின் வீரத்தாலும் பயங்கரவாதிகளை அழிப்போம் என்ற உறுதி மொழியை நிறைவேற்றியுள்ளோம். இந்தியாவுக்கு சொந்தமான தண்ணீரை பாகிஸ்தான் பெறாது. இந்தியர்களின் ரத்தத்துடன் விளையாடுவதற்கு பாகிஸ்தான் பெரும் விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும். பாகிஸ்தானால் இந்தியாவை நேரடியாக வெல்ல முடியாததால் பயங்கரவாதத்தை ஆயுதமாக பயன்படுத்துகிறது” எனப் பேசினார்.