உலகத்தை அச்சுறுத்திய கரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் மிகப்பெரிய அளவில் உள்ளது.தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மே மாதம் 3-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இருந்தபோதிலும் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதற்கிடையில் ஊரடங்கிலும் மக்களின் நலனை குறிக்கோளாக கொண்டு பணியாற்றி வரும் மருத்துவர்கள், காவலர்கள், பத்திரிகையாளர்கள், தூய்மை பணியாளர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்படுவது மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டும் இல்லாமல் கரோனா பாதிப்பால் உயிரிழந்த மருத்துவர்களின் உடலை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பிரதமர் மோடி, தனது ட்விட்டர் பக்கத்தில் "மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களின் பாதுகாப்பில் சமரசத்துக்கு இடமில்லை. சுகாதார பணியில் ஈடுபட்டுள்ள ஒவ்வொருவரையும் காக்க வேண்டியது அரசின் பொறுப்பு" என தெரிவித்துள்ளார்.