
இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று (26-05-25) குஜராத் மாநிலத்திற்குச் சென்றார். முதல் நாளான இன்று வதோரா பகுதியில் பிரதமர் மோடி ரோடு ஷோ (வாகனப் பேரணி) நடத்தினார். திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி சென்ற பிரதமர் மோடிக்கு, வழியெங்கும் இருந்த பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதன் பின்னர், தாஹோத் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “ஜம்மு & காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு பிறகு, இந்தியா அமைதியாக உட்கார முடியுமா? மோடி அமைதியாக உட்கார முடியுமா? நம் சகோதரிகள் மற்றும் தாய்மார்களின் நெற்றியில் இருந்து யாராவது குங்குமத்தை அகற்றும்போது, அவர்கள் அகற்றப்படுவதும் உறுதி செய்யப்படுகிறது. ஆபரேஷன் சிந்தூர் என்பது வெறும் இராணுவ நடவடிக்கை மட்டுமல்ல, இது இந்தியர்களின் மதிப்புகள் மற்றும் உணர்ச்சிகளின் வெளிப்பாடு. பயங்கரவாதத்தை பரப்புபவர்கள், மோடியுடன் போட்டி போடுவது எவ்வளவு கடினமாக இருக்கும் என்பதை தங்கள் கனவில் கூட கற்பனை செய்திருக்க மாட்டார்கள்.
பஹல்காமில் அப்பாக்கள், தங்கள் குழந்தைகள் முன்னிலையில் சுடப்பட்டனர். அந்தப் படங்களைப் பார்க்கும்போது ரத்தம் கொதிக்கிறது. பயங்கரவாதிகள் 140 கோடி இந்தியர்களுக்கு சவால் விட்டனர். எனவே நீங்கள், பிரதமராக பொறுப்பைக் கொடுத்ததற்காக மோடி அதைச் செய்தார். நான் பாதுகாப்புப் படைகளுக்கு சுதந்திரம் கொடுத்தேன். பல தசாப்தங்களாக உலகம் காணாததை நமது துணிச்சலானவர்கள் செய்தார்கள். நாங்கள் 9 பயங்கரவாத தளங்களைத் தேடினோம். அவற்றின் இருப்பிடத்தை உறுதிப்படுத்தினோம். 6 ஆம் தேதி இரவு, 22 நிமிடங்களில் அவற்றை தூசியாக்கினோம். இந்தியாவின் நடவடிக்கையால் பதறிப்போன பாகிஸ்தான் ராணுவம் பதிலடி கொடுக்கத் துணிந்தபோது, நமது படைகள் பாகிஸ்தான் ராணுவத்தையும் தோற்கடித்தன.
பிரிவினைக்குப் பிறகு இந்தியாவுடன் பகைமை கொள்வது, இந்தியாவுக்கு தீங்கு விளைவிப்பது தான் பாகிஸ்தானுக்கு ஒரே குறிக்கோள். ஆனால் நமது குறிக்கோள் வறுமையை ஒழிப்பது, பொருளாதாரத்தை வலுப்படுத்துவது மற்றும் நமது சேவைகளை மேம்படுத்துவது” எனப் பேசினார்.