அதனைத் தொடர்ந்து, மக்களவையில் நேற்று முன்தினம் (05-02-24) குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. அதில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். இதற்கு காங்கிரஸ் கட்சியினர் எதிர்வினையாற்றினர்.
இந்த நிலையில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பிரதமர் மோடி இன்று (07-02-24) மாநிலங்களவையில் பதிலளித்துப் பேசிக் கொண்டிருக்கிறார். அதில், காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்துப் பேசி வருகிறார். இதனிடையே, சில நாட்களுக்கு முன் தனி நாடு தொடர்பாக கருத்து தெரிவித்த கர்நாடகா எம்.பி. டி.கே.சுரேஷ் பேசியது குறித்து மோடி விமர்சனம் செய்துள்ளார்.
அதில் அவர், “தேசம் என்பது நமக்கு வெறும் நிலம் மட்டுமல்ல. நம் அனைவருக்கும் இது ஒரு உத்வேகம் தரும் அலகு. உடலின் ஒரு உறுப்பு செயல்படவில்லை என்றால் முழு உடலும் ஊனமாக கருதப்படுகிறது. அதேபோல், நாட்டின் ஒரு மூலையில் வளர்ச்சியில்லாமல் இருந்தால் நாடு வளர்ச்சி அடையாது. இன்று பேசப்படும் மொழி, நாட்டை உடைக்க அரசியல் சுயநலத்திற்காக புதிய கதைகள் கட்டமைக்கப்படுகின்றன. நாட்டுக்கு இதைவிட பெரிய துரதிர்ஷ்டம் என்ன இருக்க முடியும்? ஒரு தேசியக் கட்சியிலிருந்து இப்படிப்பட்ட எண்ணம் வெளிவருகிறது என்றால் துரதிர்ஷ்டம் தான். நமது வரி, நமது பணம் என்பது என்ன மாதிரியான கருத்து இது? இது நாட்டின் எதிர்காலத்திற்கு ஆபத்தானது” என்று கூறினார்.