/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/996_126.jpg)
குரு கோபிந்த் சிங்கின் மூத்த மகன்கள் இருவர் 1804 வருடம் முகலாய ஆட்சியில் நடந்த சம்கர் போரில் கொல்லப்பட்டனர். இதனை நினைவு கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26 ஆம் தேதி அவர்களின் வீரத்தைப் போற்றும் வகையில்‘வீர் பால் திவாஸ்’ தினமாக அனுசரிக்கப்படுமென இந்த ஆண்டு(2022) குரு கோபிந்த் சிங்கின் பிறந்தநாளான ஜனவரி 9ஆம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார்.
அந்த வகையில், நேற்று டெல்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் தேசிய அரங்கில் ‘வீர் பால் திவாஸ்’ தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, “அவுரங்கசீப்பும் அவரைச் சார்ந்தவர்களும், குரு கோபிந்த் சிங்கின் குழந்தைகளை வாள் மூலம் மதம் மாற்ற முயன்றனர். அதை அவர்கள் மறுக்க, அவுரங்கசீப் அரசு குரு கோபிந்த் சிங்கின் இரண்டு குழந்தைகளையும் கொலை செய்ய முடிவு செய்தது.ஒருபுறம் தீவிரவாதம், மத வெறியின் உச்சங்கள் இருந்தன. மறுபுறம் ஒவ்வொரு மனிதனிலும் கடவுளைக் காணும் ஆன்மீகம் இருந்தது. இந்தியாவை மாற்றும் அவரது திட்டங்களுக்கு எதிராக குரு கோபிந்த் சிங் மலை போல் நின்றார். அந்த சகாப்தத்தைக் கற்பனை செய்து பாருங்கள்.
தனியாக இருந்தாலும் அவர்கள் முகலாயர்களுக்குத்தலை வணங்கவில்லை. இதனால், முகலாயர்கள் குருவின் 2 மகன்களைக் கொன்றனர். அவர்களின் வீரத் தியாகம்தான் பல நூற்றாண்டுகளாக உத்வேகமாக இருந்து வருகிறது. இத்தகைய புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்ட எந்தவொரு நாடும் தன்னம்பிக்கை மற்றும் சுயமரியாதை நிறைந்ததாக இருக்க வேண்டும். ஆனாலும், தாழ்வு மனப்பான்மையைத் தூண்ட புனையப்பட்ட வரலாற்றுக் கட்டுக்கதைகள் பரப்பப்படுகின்றன. வெற்றியின் புதிய உச்சங்களைத்தொட்டு நாம் முன்னேறுவதற்கு கடந்த காலத்தின் குறுகிய கண்ணோட்டத்தில் இருந்து விடுபட வேண்டும். அடிமை மனப்பான்மையின் அனைத்துத்தடயங்களையும் அகற்ற நாடு உறுதி ஏற்றுள்ளது. அதன்படி, கடந்த காலத்தவறுகள் புதிய இந்தியாவில் சரி செய்யப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)