Skip to main content

"சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவை நிறைவேற்ற பொன்னான வாய்ப்பு" - பட்ஜெட்  தொடர் குறித்து பிரதமர் மோடி பேட்டி!

Published on 29/01/2021 | Edited on 29/01/2021

 

pm modi

 

இந்திய நாடளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (29.01.2021) தொடங்கவுள்ளது. வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்தக் கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் இந்திய குடியரசுத் தலைவர் உரையாற்றுகிறார். வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, குடியரசுத் தலைவரின் உரையைப் புறக்கணிப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.

 

இந்தநிலையில் பட்ஜெட் கூட்டத்தொடருக்கு வருகை தந்த பிரதமர் மோடி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் சுதந்திரப் போராட்ட வீரர்கள் கண்ட கனவுகளை நிறைவேற்ற தேசத்தின் முன் ஒரு பொன்னான வாய்ப்பு வந்துள்ளதாகவும், இந்த தசாப்தத்தை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் எனவும் பிரதமர் மோடி கூறியுள்ளார். 

 

இதுகுறித்து அவர், "இன்று இந்த தசாப்தத்தின் முதல் கூட்டத்தொடர் தொடங்குகிறது. இந்தியாவின் பிரகாசமான எதிர்காலத்திற்கு இந்த பத்தாண்டுகள் மிகவும் முக்கியமானது. சுதந்திரப் போராட்ட வீரர்கள் கண்ட கனவுகளை நிறைவேற்ற தேசத்தின் முன் ஒரு பொன்னான வாய்ப்பு வந்துவிட்டது. இந்த பத்தாண்டுகளை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். இதை மனதில் வைத்து, இந்த கூட்டத்தொடரில் இந்த பத்தாண்டுகளை மையமாகக் கொண்ட விவாதங்கள் இருக்க வேண்டும். இது தேசத்தால் எதிர்பார்க்கப்படுகிறது. மக்களின் குறிகோள்களை நிறைவேற்றுவதற்கான எங்கள் பங்களிப்பை வழங்குவதில் நாங்கள் பின்தங்க மாட்டோம் என்று நான் நம்புகிறேன்" எனக் கூறினார்.

 

"இந்தியாவின் வரலாற்றில் முதல்முறையாக, 2020 ஆம் ஆண்டில் 4-5 சிறிய பட்ஜெட் தொகுப்புகளை வெவ்வேறு வடிவத்தில் முன்வைக்க வேண்டியிருந்தது. இந்த பட்ஜெட் அந்த 4-5 சிறிய பட்ஜெட்டுகளின் ஒரு பகுதியாக பார்க்கப்படும்" எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

 

சார்ந்த செய்திகள்