Advertisment

லேண்டர் இறங்கிய இடத்திற்குப் பெயர் ‘சிவசக்தி’ - பிரதமர் மோடி 

place where Vikram lander landed on the moon is named 'Sivasakthi'

Advertisment

இந்தியா சார்பில் நிலவின் தென் பகுதியை ஆராயக் கடந்த ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் பாய்ந்த சந்திரயான் - 3 நிலவின் ஈர்ப்பு விசைக்குள் செலுத்தப்பட்டு நிலவுக்கு மிக அருகில் சென்றதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் நிலவின் தென் துருவத்தில் இறங்கி சாதனை படைத்தது. இந்தியா முழுவதும் இந்த சாதனை கொண்டாடப்பட்டு வருகிறது. நிலவின் தென் பகுதியில் இறங்கிய விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியே வந்து ஆய்வுக்கான தனது பயணத்தை நிலவின் தென் துருவத்தில் தொடங்கியுள்ளது.

நிலவு அதிர்வை அளவிடும் கருவி, நிலவின் சுற்றுச் சூழலை ஆய்வு செய்யும் கருவி, வெப்ப இயற்பியல் பரிசோதனைக் கருவி எனும் மூன்று கருவிகள் செயல்பாடும் தற்போது தொடங்கி உள்ளதாக இஸ்ரோ தெரிவித்திருந்தது. மேலும் நிலவில் தரையிறங்கிய சந்திரயான் 3 விண்கலத்தின் ரோவர் 8 மீட்டர் பயணித்துள்ளது. ரோவரின் முக்கிய பகுதிகளான எல்ஐபிஎஸ் (LIBS), எபிஎக்ஸ்எஸ் (APXS) ஆகியவை செயல்படத் தொடங்கியுள்ளன. லேண்டர், உந்து விசைக்கலன், ரோவர் ஆகியவை திட்டமிட்டபடி சிறப்பாகச் செயல்படுகின்றன என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் நிலாவில் லேண்டர் தரையிறங்கிய போது, பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி அடுத்து கிரீஸ் நாட்டின் சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பியதும்,டெல்லியிலிருந்து நேராக இன்று பெங்களூருவில் வந்திறங்கினார். இதையடுத்து பெங்களூருவில் உள்ள இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் சந்திரயான் - 3 திட்டத்தில் பணியாற்றிய விஞ்ஞானிகளைச் சந்தித்து தனது பாராட்டுகளைத் தெரிவித்து அவர்களுடன் கலந்துரையாடினார். அதன் பின்பு பேசிய பிரதமர் மோடி, “சந்திரயான் - 3 திட்டத்தில் பெண்களின் பங்களிப்பும் முக்கியமாக உள்ளது. எனவே விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கிய இடம் சிவசக்தி என்று பெயரிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சக்தி என்பது பெண்களின் சக்தியையும் குறிக்கும். அதேபோன்று 2019 ஆம் ஆண்டு சந்திரயான் 2 நிலவில் தனது இடத்தைப் பதித்த இடம் திரங்கா(மூவர்ணக்கொடி) என அழைக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

ISRO
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe