Skip to main content

காங்கிரசை பலவீனப்படுத்தும் மம்தா - காங். மூத்த தலைவர் குற்றச்சாட்டு!

Published on 16/10/2021 | Edited on 16/10/2021

 

harish rawat

 

தேர்தல் வியூக வல்லுநரான பிரசாந்த் கிஷோர், காங்கிரஸில் இணையப்போவதாக தொடர்ந்து தகவல் வெளியானது. இருப்பினும் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் இன்னும் இணையவில்லை. கட்சியில் சேர பிரசாந்த் கிஷோர் வைக்கும் கோரிக்கைகள் மிகவும் அதிகமாக இருப்பதாக காங்கிரஸ் தலைமை நினைப்பதாலும், காங்கிரஸ் தலைவர்கள் சிலர், பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் இணைந்துவிட்டு அதன்மூலமாக திரிணாமூல் காங்கிரஸ் அல்லது தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு உதவலாம் என சந்தேகத்தை எழுப்பியதாலும் அவரை காங்கிரஸில் இணைக்கும் திட்டத்தை ஒத்திவைத்திருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் அண்மையில் தெரிவித்தன.

 

இந்தநிலையில், ‘பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் இணையலாம். ஆனால் காங்கிரஸின் சட்டத்திட்டங்களுக்கு உட்பட வேண்டும்’ என காங்கிரஸ் மூத்த தலைவரான ஹரிஷ் ராவத் தனியார் ஊடக நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது, “இந்திய குடிமகனாகவும், சுதந்திர போரட்டம் மற்றும் காங்கிரஸின் மதிப்புகளில் நம்பிக்கை வைத்துள்ள எவரும் கட்சியில் சேரலாம். எனவே பிரசாந்த் கிஷோரும் இணையலாம். நாங்கள் எப்போதும் புதிய யோசனைகளை ஏற்க தயாராக இருக்கிறோம். ஆனால் கட்சியை ஒரு குறிப்பிட்ட நபருக்கு அடமானம் வைக்க முடியாது. அவர் மிகவும் திறமையான நபராக இருக்கலாம், ஆனால், 'பாபா, நீங்கள் எங்களுக்காக வேலை செய்யுங்கள். நாங்கள் வேலை செய்வதை நிறுத்திவிடுகிறோம்’ என்று சொல்ல முடியாது.

 

கிஷோர் அனைவராலும் அறியப்பட்டவர். மேலும் நிபுணத்துவம் பெற்றார். ஆனால் காங்கிரசில் ஒரு முறை உள்ளது, அவர் அதை ஏற்க வேண்டும். அவர் அந்த வழியாக வர வேண்டும். முதலில், அவர் ஒரு உறுப்பினராக ஆக வேண்டும். பிறகு மற்ற விஷயங்கள் நடக்க தொடங்க வேண்டும். நாங்கள் அவருக்குப் பொருத்தமான நிலையை, பொருத்தமான பணியைக் கண்டுபிடிப்போம். பிரசாந்த் கிஷோர் போன்ற ஒருவரை வேலைக்காக காக்க வைக்கமாட்டோம்.” இவ்வாறு ஹரிஷ் ராவத் தெரிவித்தார்.

 

அதன்பின்னர் மம்தாவை பற்றி பேசிய ஹரிஷ் ராவத், அவர் காங்கிரஸை பலவீனப்படுத்துவதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், "நாங்கள் இளைஞர் காங்கிரசிலும், பாராளுமன்றத்திலும் நீண்டகாலம் ஒன்றாக இருந்தோம். மோடி மற்றும் அமித் ஷாவுடன் தேர்தலில் அவர் சண்டையிட்ட விதத்தை நான் மதிக்கிறேன். ஆனால் அவரது கட்சி இல்லாத சில மாநிலங்களில், தேர்தல் நேரத்தில், காங்கிரசிலிருந்து சில நபர்களை அழைத்து அவர்களுக்கு சில பதவிகளைக் கொடுக்கக் கூடாது என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும். அதைச் செய்வதன் மூலம் நீங்கள் கோவா மற்றும் வடகிழக்கில் காங்கிரஸை பலவீனப்படுத்துகிறீர்கள். இது எதிர்க்கட்சி ஒற்றுமைக்கு எந்த வகையிலும் உதவாது" என கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ராம நவமி ஊர்வலத்தில் கலவரம்; பா.ஜ.க கடும் குற்றச்சாட்டு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
BJP strongly accused on mamata banerjee on Riots at Ram Navami Procession

நாடு முழுவதும் நேற்று (17-04-24) ராம நவமி விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவையொட்டி அனைத்து மாநிலங்களில் உள்ள ராமர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

அந்த வகையில், மேற்கு வங்க மாநிலம், முர்ஷிதாபாத்தின் சக்திபூர் பகுதியில் ராம் நவமி உத்சவ் உஜ்ஜபன் கமிட்டி சார்பாக நேற்று ஊர்வலம் நடத்தினர். அப்போது, அந்த ஊர்வலத்தின் மீது சிலர் வீட்டின் மாடிகளில் இருந்து கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலின் போது, 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். உடனடியாக அங்கிருந்தவர்கள், காயமடைந்தவர்களை மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, கல்வீச்சு தாக்குதல் நடந்த அந்த பகுதிக்கு விரைந்த போலீசார், அங்கிருந்த கும்பல்களை கலைக்க தடியடி நடத்தியும், புகை குண்டுகளை வீசியும் நிலைமையை தன் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனை தொடர்ந்து, கலவரம் நடந்த அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராம் நவமி ஊர்வலத்தில் கலவரம் ஏற்பட்டதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியே காரணம் என்று அங்குள்ள பா.ஜ.க குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து மேற்கு வங்க பா.ஜ.க மாநிலத் தலைவர் சுவேந்த அதிகாரி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “ கடந்த ஆண்டு ஸ்ரீராம நவமி ஊர்வலங்கள் தல்கோலா, ரிஷ்ரா மற்றும் செரம்பூர் ஆகிய இடங்களில் தாக்குதலுக்கு உள்ளானது போல், ​​இந்த ஆண்டும் மம்தா காவல்துறை ராம பக்தர்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டது.

நிர்வாகத்திடம் இருந்து உரிய அனுமதி பெற்ற அமைதியான ராம நவமி ஊர்வலம், சில குண்டர்களால் தாக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில், மம்தாவின் காவல்துறை  குற்றவாளிகளுடன் சேர்ந்து, ஊர்வலம் திடீரென முடிவடைவதை உறுதி செய்வதற்காக ராம பக்தர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளது. இது மட்டுமின்றி, மாணிக்யஹார் மோரில் உள்ள சனாதானி சமூகத்தைச் சேர்ந்த கடைகளை  கொள்ளையடிப்பதையும் மம்தாவின் காவல்துறை தடுக்க முடியவில்லை. 

ராம நவமி ஊர்வலத்தில் கலவரம் ஏற்பட்டதற்கு மம்தா பானர்ஜியே காரணம். அவரின் ஆத்திரமூட்டும் பேச்சின் காரணமாகவே மாநிலத்தின் பல்வேறு இடங்களில் ராம நவமி ஊர்வலங்கள் சீர்குலைக்கப்பட்டன். எனவே, மேற்கு வங்கத்தில் மத விழாக்களை அமைதியான மற்றும் குற்றச் சம்பவங்கள் இல்லாமல் கொண்டாட, மாநில அரசு மாற்றப்பட வேண்டும். மேலும், ராம பக்தர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக என்.ஐ.ஏ விசாரணை நடத்த வேண்டும்” என்று பதிவிட்டிருந்தார்.

Next Story

“பிரதமர் மோடி முதலில் கண்ணாடியில் தன்னை பார்க்க வேண்டும்” - மம்தா கடும் தாக்கு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Mamata says PM Modi should look at himself in the mirror

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளான தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரபடுத்தி வருகின்றன.

அந்த வகையில், 42 மக்களவைத் தொகுதிகள் கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில், ஏப்ரல் 19, 26 மற்றும் மே 7, 13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. மேலும், பகவான்கோலா மற்றும் பாராநகர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் மே 7 மற்றும் ஜூன் 1 அன்று இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

இதற்கிடையில், இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ், 42 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது. இது காங்கிரஸ் தரப்பினரிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும், தொகுதி பங்கீடு தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸுடன் தொடர்ந்து  பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறிய காங்கிரஸ் கட்சிக்கும் மேலும் அதிருப்தி ஏற்படுத்தும் வகையில், திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 42 வேட்பாளர்களை மம்தா பானர்ஜி அதிரடியாக அறிவித்தார்.

இந்த நிலையில், மக்களவைத் தேர்தல் தேதிகளைத் தேர்தல் ஆணையம் அறிவித்ததால், நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் - இடதுசாரிகள் கூட்டணி, பா.ஜ.க மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம், ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள மொயினகுரி பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி பேசுகையில், “ஊழல் புகார்களை விசாரிக்க பா.ஜ.க அரசு, 300 மத்தியக் குழுக்களை மேற்கு வங்காளத்துக்கு அனுப்பியது. ஆனால் அவர்கள் எதையும் கண்டுபிடிக்கவில்லை. இப்போது, ​​பிரதமர் மோடி வங்காள மக்களுக்குப் பதில் சொல்ல வேண்டும். ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் மேற்கு வங்காளத்துக்கு வரவேண்டிய நிதி என்ன ஆனது? ஏழை மக்கள் இத்திட்டத்தின் கீழ் பணிபுரிந்தனர். ஆனால் ஊதியம் வழங்கப்படவில்லை. மேற்கு வங்காளத்தில் நடத்தப்பட்ட விசாரணைகள் குறித்த ஒரு வெள்ளை அறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும்.

திரிணாமுல் காங்கிரஸ் ஊழல் கட்சி என்று பிரதமர் கூறுகிறார். அவர் முதலில் கண்ணாடி முன்பு நின்று தன்னைப் பார்க்க வேண்டும். அவரது கட்சி கொள்ளையர்களால் நிரம்பியுள்ளது. பா.ஜ.க, மேற்கு வங்காளத்துக்கு எதிரான கட்சி. குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மேற்கு வங்கத்தில் அனுமதிக்க மாட்டோம். திரிணாமுல் காங்கிரஸ் மட்டுமே வங்காளத்தில் பா.ஜ.கவை எதிர்த்துப் போராடுகிறது. மற்ற இரண்டு எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள், பா.ஜ.கவுடன் இணைந்து செயல்படுகின்றன. நாங்கள் தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் இருக்கிறோம். ஆனால் வங்காளத்தில் மாநில நலனுக்காகத் தனித்து நிற்கிறோம். நாட்டைக் காப்பாற்ற திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும்” என்று கூறினார்.