Skip to main content

காங்கிரசை பலவீனப்படுத்தும் மம்தா - காங். மூத்த தலைவர் குற்றச்சாட்டு!

Published on 16/10/2021 | Edited on 16/10/2021

 

harish rawat

 

தேர்தல் வியூக வல்லுநரான பிரசாந்த் கிஷோர், காங்கிரஸில் இணையப்போவதாக தொடர்ந்து தகவல் வெளியானது. இருப்பினும் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் இன்னும் இணையவில்லை. கட்சியில் சேர பிரசாந்த் கிஷோர் வைக்கும் கோரிக்கைகள் மிகவும் அதிகமாக இருப்பதாக காங்கிரஸ் தலைமை நினைப்பதாலும், காங்கிரஸ் தலைவர்கள் சிலர், பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் இணைந்துவிட்டு அதன்மூலமாக திரிணாமூல் காங்கிரஸ் அல்லது தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு உதவலாம் என சந்தேகத்தை எழுப்பியதாலும் அவரை காங்கிரஸில் இணைக்கும் திட்டத்தை ஒத்திவைத்திருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் அண்மையில் தெரிவித்தன.

 

இந்தநிலையில், ‘பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் இணையலாம். ஆனால் காங்கிரஸின் சட்டத்திட்டங்களுக்கு உட்பட வேண்டும்’ என காங்கிரஸ் மூத்த தலைவரான ஹரிஷ் ராவத் தனியார் ஊடக நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது, “இந்திய குடிமகனாகவும், சுதந்திர போரட்டம் மற்றும் காங்கிரஸின் மதிப்புகளில் நம்பிக்கை வைத்துள்ள எவரும் கட்சியில் சேரலாம். எனவே பிரசாந்த் கிஷோரும் இணையலாம். நாங்கள் எப்போதும் புதிய யோசனைகளை ஏற்க தயாராக இருக்கிறோம். ஆனால் கட்சியை ஒரு குறிப்பிட்ட நபருக்கு அடமானம் வைக்க முடியாது. அவர் மிகவும் திறமையான நபராக இருக்கலாம், ஆனால், 'பாபா, நீங்கள் எங்களுக்காக வேலை செய்யுங்கள். நாங்கள் வேலை செய்வதை நிறுத்திவிடுகிறோம்’ என்று சொல்ல முடியாது.

 

கிஷோர் அனைவராலும் அறியப்பட்டவர். மேலும் நிபுணத்துவம் பெற்றார். ஆனால் காங்கிரசில் ஒரு முறை உள்ளது, அவர் அதை ஏற்க வேண்டும். அவர் அந்த வழியாக வர வேண்டும். முதலில், அவர் ஒரு உறுப்பினராக ஆக வேண்டும். பிறகு மற்ற விஷயங்கள் நடக்க தொடங்க வேண்டும். நாங்கள் அவருக்குப் பொருத்தமான நிலையை, பொருத்தமான பணியைக் கண்டுபிடிப்போம். பிரசாந்த் கிஷோர் போன்ற ஒருவரை வேலைக்காக காக்க வைக்கமாட்டோம்.” இவ்வாறு ஹரிஷ் ராவத் தெரிவித்தார்.

 

அதன்பின்னர் மம்தாவை பற்றி பேசிய ஹரிஷ் ராவத், அவர் காங்கிரஸை பலவீனப்படுத்துவதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், "நாங்கள் இளைஞர் காங்கிரசிலும், பாராளுமன்றத்திலும் நீண்டகாலம் ஒன்றாக இருந்தோம். மோடி மற்றும் அமித் ஷாவுடன் தேர்தலில் அவர் சண்டையிட்ட விதத்தை நான் மதிக்கிறேன். ஆனால் அவரது கட்சி இல்லாத சில மாநிலங்களில், தேர்தல் நேரத்தில், காங்கிரசிலிருந்து சில நபர்களை அழைத்து அவர்களுக்கு சில பதவிகளைக் கொடுக்கக் கூடாது என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும். அதைச் செய்வதன் மூலம் நீங்கள் கோவா மற்றும் வடகிழக்கில் காங்கிரஸை பலவீனப்படுத்துகிறீர்கள். இது எதிர்க்கட்சி ஒற்றுமைக்கு எந்த வகையிலும் உதவாது" என கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“வாரிசு அரசியலில் எனக்கு நம்பிக்கை இல்லை!” - உறவை துண்டித்த மம்தா பானர்ஜி

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Mamata Banerjee broke off the her brother relationship

மேற்கு வங்க மாநிலத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தியா கூட்டணியில் உள்ள மம்தா பானர்ஜி, காங்கிரஸ் உடனான தொகுதி பங்கீட்டில் ஏற்பட்ட பிரச்சனையால், மேற்கு வங்கத்தில் மட்டும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தார். 

அதன்படி, வரவிருக்கிற மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போகும், அங்குள்ள 42 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் கட்சி வேட்பாளர்களை அதிரடியாக அறிவித்தார். இது காங்கிரஸ் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இது குறித்து, காங்கிரஸ் தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ் மற்றும் ஆதிர் ரஞ்சன் செளத்திரி ஆகியோர் மம்தா பானர்ஜியை கடுமையாக விமர்சனம் செய்திருந்தனர். 

இதற்கிடையே, முதல்வர் மம்தா பானர்ஜி, தனது சகோதரரின் உறவை துண்டிப்பதாக அறிவித்துள்ளார். வரும் மக்களவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஹவுரா தொகுதியின் வேட்பாளராக சிட்டிங் எம்.பியான பிரசுன் பானர்ஜி அறிவிக்கப்பட்டுள்ளார். ஹவுரா தொகுதியில் 3 முறை வெற்றி பெற்ற பிரசுன் பானர்ஜிக்கு நான்காவது முறையாக வாய்ப்பு வழங்கியதற்கு மம்தா பானர்ஜியின் சகோதரர் பாபுன் பானர்ஜி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.

இது குறித்து பாபுன் பானர்ஜி கூறுகையில், “ஹவுரா வேட்பாளர் தேர்வில் எனக்கு மகிழ்ச்சி இல்லை. பல திறமையான வேட்பாளர்கள் இருந்தும், பிரசுன் பானர்ஜியை தேர்வு செய்ததில் எனக்கு உடன்பாடு இல்லை. இந்த விஷயத்தில் மம்தா பானர்ஜி என்னுடன் உடன்படமாட்டார். ஆனால், தேவைப்பட்டால், ஹவுரா தொகுதியில் நான் சுயேட்சையாக போட்டியிடுவேன்” என்று தெரிவித்தார்.

பாபுன் பானர்ஜி பேட்டியளித்த, அடுத்த சில மணி நேரத்திலேயே மம்தா பானர்ஜி, தனது சகோதரரின் உறவை முறித்துக் கொள்வதாக அதிரடியாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக மம்தா பானர்ஜி கூறுகையில், “ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் பாபுன் பானர்ஜி ஏதாவது ஒரு பிரச்சனையை உருவாக்குகிறார். பேராசை பிடித்தவர்களையும் பிடிக்காது. வாரிசு அரசியலிலும் எனக்கு நம்பிக்கை இல்லை. அவருடைய பல செயல்பாடுகளை நான் ஏற்கவில்லை. எனவே, பாபுன் பானர்ஜியுடனான அனைத்து உறவையும் முறித்துக் கொள்கிறேன். எனது குடும்பமும் நானும், பாபுன் பானர்ஜி உடனான உறவை துண்டித்துக் கொள்கிறோம்” என்று அதிரடியாக தெரிவித்துள்ளார். 

Next Story

“பிரதமர் அதிருப்தியடைவாரோ என்று மம்தா பானர்ஜி பயப்படுகிறார்” - காங்கிரஸ் விமர்சனம்

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Congress says Mamata Banerjee fears PM's regret

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காகப் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. விரைவில் தேர்தல் அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஒரு சில கட்சிகள் வேட்பாளர்களையும் அறிவித்து வருகின்றன.

அதே வேளையில், இந்தியா கூட்டணியில் இருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே தொகுதிப் பங்கீடு தொடர்பாகத் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. அதில், மேற்கு வங்க மாநிலத்தில் 42 மக்களவைத் தொகுதிகளில் 2 இடங்களை மட்டும் காங்கிரஸுக்கு ஒதுக்க திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி முடிவு செய்திருந்தார். ஆனால், காங்கிரஸ் இதை ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபடப் போவதில்லை என மம்தா பானர்ஜி அதிரடியாக அறிவித்திருந்தார்.

ஆனால், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் தொடர்ந்து தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்து வந்தது. இந்த சூழ்நிலையில், 543 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களில் முதற்கட்டமாக 195 வேட்பாளர்களின் பெயர்களை பா.ஜ.க. வெளியிட்டிருந்தது. அதேபோன்று காங்கிரஸ் கட்சியின் சார்பில் 39 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில், மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் 42 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அம்மாநில முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி இன்று (10.03.2024) வெளியிட்டார். இதன் மூலம், மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று மம்தா பானர்ஜி சூசகமாகத் தெரிவித்துள்ளார். இது காங்கிரஸ் கட்சியினரிடம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு காங்கிரஸ் தலைவர்கள், மம்தா பானர்ஜியை விமர்சனம் செய்து வருகின்றனர். அந்த வகையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “காங்கிரஸ் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் மரியாதைக்குரிய சீட்-பகிர்வு ஒப்பந்தம் செய்ய விரும்புவதாக பலமுறை அறிவித்துள்ளது. பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டி ஒப்பந்தம் மேற்கொள்ளும் முறையை காங்கிரஸ் கடைப்பிடித்து வருகிறது. பா.ஜ.க.வுக்கு எதிராக இந்தியா கூட்டணி இணைந்து போராட வேண்டும் என்று காங்கிரஸ் எப்போதும் விரும்புகிறது” என்று பதிவிட்டுள்ளார்.

அதேபோல், மேற்கு வங்க காங்கிரஸ் தலைவரும், மக்களவை காங்கிரஸ் கட்சித் தலைவருமான ஆதிர் ரஞ்சன் சவுத்தரி கூறுகையில், “இந்தியாவின் எந்த ஒரு அரசியல் கட்சியும் தன்னைப் போன்ற தலைவரை நம்பக்கூடாது என்பதை மம்தா பானர்ஜி நிரூபித்துள்ளார். இந்தியா கூட்டணியில் தொடர்ந்து நீடித்தால், பிரதமர் மோடிக்கு அதிருப்தி வந்துவிடுமோ என்ற அச்சத்தில் மம்தா பானர்ஜி உள்ளார். இந்தியா கூட்டணியில் இருந்து தன்னைப் பிரித்துக் கொண்டதன் மூலம், ‘என் மீது அதிருப்தி அடைய வேண்டாம். பா.ஜ.க.வுக்கு எதிராக நான் போராட நிற்கவில்லை’ என்று பிரதமர் அலுவலகத்திற்கு செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்” என்று கூறினார்.