Photographer's ends life and Letter requesting change in dowry law in madhya pradesh

மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூர் நகரைச் சேர்ந்தவர் 28 வயதான நிதின் படியார். புகைப்பட கலைஞரான நிதின் படியாருக்கு திருமணமான நிலையில், இவருக்கு எதிராக இவரது மனைவி ராஜஸ்தானில் வரதட்சணை கொடுமை வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கை வாபஸ் பெற நிதினிடம், அவரது மனைவியின் குடும்பத்தினர் பணம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த 20ஆம் தேதி நிதின் படியார் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், தற்கொலை செய்வதற்கு முன்பு நிதின் எழுதிய கடிதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது, ‘வரதட்சணைத் தடைச் சட்டத்தை, பெண்கள் சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவதால், அதை மாற்றுமாறு நிதின் பதியார் என்ற நான் இந்திய அரசைக் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் அதை மாற்றவில்லை என்றால், இன்னும் பல ஆண்களும் அவர்களது குடும்பங்களும் ஒவ்வொரு நாளும் சீரழிந்து போவார்கள்.

இந்தியாவில் உள்ள இளைஞர்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்றும், அப்படிச் செய்தால், அதற்கு முன் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என்றும் நான் கேட்டுக்கொள்கிறேன். நான் கொடுமைப்படுத்தப்பட்டதாக நீங்கள் உணர்ந்தால், என் மரணத்திற்குப் பிறகு எனக்காக நீதி கேளுங்கள், அல்லது உங்கள் முறைக்காக காத்திருங்கள்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

Advertisment

அந்த கடிதத்தின் அடிப்படையில், தற்கொலைக்கு தூண்டியதாகக் கூறி நிதின் படியாரின் மனைவி மற்றும் அவரது தாயார் மற்றும் இரண்டு சகோதரிகள் உள்பட அவரது மூன்று குடும்ப உறுப்பினர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.