Skip to main content

பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஏன்?- மத்திய அமைச்சர் விளக்கம்!

Published on 21/02/2021 | Edited on 21/02/2021

 

petrol, diesel price hike union petroleum minister pressmeet

இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் வீடுகளில் உபயோகப்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், சாமானிய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால், விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க மத்திய அரசை காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.

 

அதேபோல், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து பல்வேறு மாநிலங்களிலும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மக்களவைக் குழு தலைவருமான சோனியா காந்தி, பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், 'பெட்ரோல், டீசல் விலையின் தொடர் உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார். 

 

அதன் தொடர்ச்சியாக, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியில் லிட்டருக்கு ஒரு ரூபாயைக் குறைத்து மேற்கு வங்க அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த விலை குறைப்பு இன்று (21/02/2021) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

இந்த நிலையில், நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பாக தனியார் செய்தித் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், "எண்ணெய் வள நாடுகள் உற்பத்தியைக் குறைத்ததால் எரிபொருள் விலை உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைத்ததால் இந்தியா போன்ற இறக்குமதி செய்யும் நாடுகள் பாதிக்கப்படுகின்றன. இது நடக்கக் கூடாது என நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதில் மாற்றம் வரும் என நாங்கள் நம்புகிறோம். எண்ணெய் வள நாடுகள் அதிக லாபம் பெறுவதற்காகக் குறைந்த அளவில் உற்பத்திச் செய்கின்றன" எனத் தெரிவித்தார். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

விமான கட்டணம் கிடுகிடு உயர்வு; பயணிகள் கடும் அதிர்ச்சி!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Air fares hike Passengers shocked

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மற்றும் வார விடுமுறை காரணமாகப் பெரும்பாலான பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பி வருகின்றனர். இதன் காரணமாகப் பேருந்துகள், ரயில்கள் என அனைத்திலும் மக்கள் கூட்டம் அதிகரித்த வண்ணம் காணப்படுகிறது. இத்தகைய சூழலில் சென்னையிலிருந்து கோயம்புத்தூர் மதுரை, திருச்சி, தூத்துக்குடி மற்றும் சேலம் செல்லும் உள்நாட்டு விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளது. வழக்கமான கட்டணத்தை விட 3 முதல் 5 மடங்கு வரை விமான டிக்கெட் கட்டணங்கள் கிடுகிடுவென உயர்ந்துள்ளன. இதனால் விமான பயணிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அந்த வகையில் சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு செல்ல வழக்கமாக 3 ஆயிரத்து 957 ரூபாயாக இருந்த விமான கட்டணம் தற்போது 12 ஆயிரத்து 716 ரூபாயாக உயர்ந்துள்ளது. சென்னையிலிருந்து மதுரைக்கு செல்ல வழக்கமாக 3 ஆயிரத்து 674 ரூபாயாக இருந்த விமான கட்டணம் 8 ஆயிரத்து 555 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதிகப்பட்சமாக 11 ஆயிரத்து 531 ரூபாயாக உள்ளது. மேலும் சென்னையிலிருந்து சேலம் செல்ல வழக்கமாக 2 ஆயிரத்து 433 ரூபாயாக இருந்த விமான கட்டணம் 5 ஆயிரத்து 572 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து கோவைக்கு செல்ல வழக்கமாக 3 ஆயிரத்து 342 ரூபாயாக இருந்த விமான கட்டணம் 8 ஆயிரத்து 616 ரூபாயாக உயர்ந்துள்ளது. 

Next Story

சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்!

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
Fee increase in toll booths
கோப்புப்படம்

தமிழகத்தில் உள்ள 7 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் மொத்தம் உள்ள 62 சுங்கச்சாவடிகளில் 7 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு (01.04.2024) முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. அதாவது அரியலூர் மாவட்டத்தில் மணகெதி, திருச்சி மாவட்டம் கல்லக்குடி, வேலூர் மாவட்டம் வல்லம், திருவண்ணாமலை மாவட்டம் இனம்கரியாந்தால், விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி ஆகிய 7 சுங்கச் சாவடிகளில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இந்த 7 சுங்கச் சாவடிகளில் குறைந்தபட்சம் 5 ரூபாயிலிருந்து 20 ரூபாய் வரை கட்டண உயர்வு ஏற்பட்டுள்ளது. மேலும் ஒரு வழிப் பயணம் மற்றும் அதே நாளில் திரும்பும் பயணம் ஆகியவற்றுக்கான கட்டணம் ஐந்து ரூபாய் முதல் முப்பது ரூபாய் வரையிலும், மாதாந்திர கட்டணம் 100 ரூபாயிலிருந்து 400 ரூபாய் வரை உயர்ந்திருப்பதாகக் கூறப்படுகிறது. சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது குறித்து வாகன உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளதோடு, காய்கறிகள், பழங்கள், பால் மற்றும் மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும் அபாயம் உள்ளதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.