Skip to main content

அகமதாபாத் டிஜிபிக்கு கிடைத்த அரிய மரியாதை; வைரலாகும் வீடியோ

Published on 09/08/2023 | Edited on 09/08/2023

 

People who have given respect to DGP Ahmadil who has been transferred

 

ஆந்திரா மாநிலம் அமலாபுரத்தைச் சேர்ந்தவர் ரவிதேஜா. ஐ.பி.எஸ். அதிகாரியான இவர் குஜராத் மாநிலம் ஜூனாகட் பகுதியில் 2019 ஆம் ஆண்டு முதல் மாவட்ட எஸ்.பி.யாக பணியாற்றி வந்தார். அதற்கு முன், இவர் மங்களூரில் காவல்துறை கண்காணிப்பாளராகப் பணிபுரிந்தார். மங்களூரில் வெற்றிகரமாகப் பணியாற்றிய பிறகு, அங்கிருந்து அகமதாபாத்தில் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், 3 ஆண்டுகளாக ஜூனாகட்டில் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த அவர், தற்போது காந்தி நகர் மாவட்ட காவல்துறைத் தலைவராக மாற்றப்பட்டார்.

 

இதனை அறிந்த ஜூனாகட் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏனென்றால், இவரின் நேர்மை; அந்த பகுதியில் உள்ள குற்றங்களைக் குறைத்தது; பொது மக்களின் நண்பனாக போலீஸ் பணியை மாற்றியது உள்ளிட்ட  எஸ்.பி. ரவிதேஜாவின் பல்வேறு நடவடிக்கையால் ஜூனாகட் குற்றங்கள் இல்லாத மாவட்டமாக மாறியதாகக் கூறப்படுகிறது. மேலும், எஸ்.பி. ரவிதேஜா காவல்துறையில் ஆற்றிய சேவையைப் பாராட்டி அப்போதைய துணை முதல்வர் நவீன் படேல் கையால் பாராட்டுச் சான்றிதழைப் பெற்றுள்ளார். காந்தி நகருக்கு இடம் மாற்றப்பட்ட எஸ்.பி. ரவிதேஜாவை ஜூனாகட் மக்கள் பூக்களைத் தூவி மரியாதை செலுத்தி வரும் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

 

People who have given respect to DGP Ahmadil who has been transferred

 

அந்த வீடியோவில், ரவிதேஜா காந்தி நகருக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டதால், ஜூனாகட் மக்கள் அவரைப் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட காரில் அமர வைத்து எஸ்.பி. அலுவலகத்தில் இருந்து போலீசார் பாரம்பரிய முறைப்படி காரில் கயிற்றைக் கட்டி இழுத்து வந்தனர். அதன் பின்னர், எஸ்.பி அலுவலகத்திற்குள் சென்று வெளியே வந்த ரவிதேஜாவை காண ஏராளமான மக்கள் நீண்ட தூரமாக வரிசையில் திரண்டு நின்றனர். அதன் பின்னர் அனைத்து மக்களையும் சந்தித்து அவர்களிடம் கை குலுக்கி பேசினார்.

 

அதனையடுத்து, அவர் தனது காரில் ஏறினார். அவர் வந்த காரின் பின்னால் ஏராளமான போலீஸ் வாகனங்கள் அணிவகுத்து வந்தன. மேலும், அவர் செல்லும் வழியெல்லாம் மக்கள் திரண்டு நின்று பூ மழை தூவி வழியனுப்பி வைத்தனர். மக்களின் அன்பு மழையில் நனைந்த எஸ்.பி. ரவிதேஜா இருகரம் கூப்பி மிகவும் பணிவுடன் அவர்களின் வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்டார். இந்த வழியனுப்பும் விழா இணையதளத்தில் வெளியாகி பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்திருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆவடியில் இரட்டைக் கொலை; போலீசாரிடம் சிக்கிய செல்போன்!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
aavadi siddha doctor and his wife incident Cell phone caught by the police

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்துள்ள மிட்டனமல்லியில் சித்த மருத்துவர் சிவன் நாயர் என்பவரும், அவரது மனைவி பிரசன்னகுமாரி ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இத்தகைய சூழலில் அவரது இல்லத்திற்கு சிகிச்சைக்கு வருவதுபோல் நேற்று (28.04.2024) இரவு வீட்டிற்குள் மர்ம நபர்கள் நுழைந்துள்ளனர். அதன்பின்னர் சித்த மருத்துவர் சிவன் நாயரையும் அவரது மனைவி பிரசன்னகுமாரியையும் மர்ம நபர்கள் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீவிர விசாராணை மேற்கொண்டனர். அப்போது இந்த இரட்டைக் கொலை நடந்த இடத்தில் செல்போன் ஒன்று கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மகேஷ் என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதோடு கொலையான மருத்துவரிடம் சிகிச்சை பெற வந்தவர்களிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் கொலையாளிகள் பல லட்சம் மதிப்பிலான தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனரா என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆவடி அருகே சித்த மருத்துவர் மற்றும் அவரது மனைவி கழுத்து அறுத்து கொடூரக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தேவகவுடா மகன் மீது பாலியல் குற்றச்சாட்டு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Deve Gowda's son issue in karnataka 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இத்தகைய சூழலில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

Deve Gowda's son issue in karnataka 

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் அவரைக் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதே சமயம் இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Deve Gowda's son issue in karnataka 

இந்நிலையில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனும், முன்னாள் அமைச்சருமான எச்.டி.ரேவண்ணா மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எச்.டி.ரேவண்ணா வீட்டில் பணியாற்றும் சமையலர் அளித்த புகாரின் பேரில் ரேவண்ணா மீது பாலியல் சீண்டல், மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஹோலேநர்சிபூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எச்.டி. ரேவண்ணாவின் மகன் பிரஜ்வால் மீது ஏற்கெனவே பாலியல் புகார் உள்ள நிலையில் தற்போது தந்தை மீதும் பாலியல் புகார் எழுந்துள்ள சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்வலையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.