Skip to main content

“மதுக்கடையை மூடாவிட்டால் அடித்து உடைக்கும் நிலை ஏற்படும்” - பா.ஜ.க ஆதரவு எம்.எல்.ஏ ஆவேசம்

Published on 08/12/2022 | Edited on 08/12/2022

 

People stuggle to shut liquor shop open in public places in Puducherry

 

புதுச்சேரியில் ஏற்கனவே ஏராளமான அரசு மற்றும் தனியார் மதுபானக் கடைகள் உள்ளன. இந்நிலையில், ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க கூட்டணி அரசு ஏராளமான மதுபானக் கடைகள் திறப்பதற்கு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து பொதுமக்கள் வசிக்கும் பல்வேறு பகுதிகளில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டு வருகிறது. இதற்கு அந்தந்தப் பகுதியைச் சார்ந்த பொதுமக்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இந்த நிலையில், புதுச்சேரி மாநிலம், உழவர்கரை பகுதியில் தேவாலயங்கள், கோவில்கள், பள்ளிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் புதிதாக மதுபானக் கடையைத் திறக்க அனுமதி கொடுத்து தனியார் மதுபானக் கடையும் திறக்கப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மதுபானக் கடையை உடனடியாக மூட வேண்டும் எனக் கோரி 'உழவர்கரை மதுபானக் கடை எதிர்ப்பு போராட்டக் குழு' ஒன்றை உருவாக்கி மதுபானக் கடை அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

 

People stuggle to shut liquor shop open in public places in Puducherry

 

இந்த ஆர்ப்பாட்டத்தில் அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு மதுக்கடையை மூட வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர். பொதுமக்களுக்கு ஆதரவாக ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில் உள்ள பா.ஜ.க ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ. சிவசங்கரன் போராட்டத்தில் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். மேலும், பொதுமக்களுக்கு ஆதரவாக கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, தி.மு.க, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர். 

 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்.எல்.ஏ. சிவசங்கரன், "பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் மதுக்கடைகளைத் திறக்கக் கூடாது என முதலமைச்சரிடம் மனு கொடுத்திருந்தும், அதையும் மீறி மதுக்கடைக்கு அனுமதி கொடுக்கப்பட்டு தற்போது திறக்கப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொகுதி எம்.எல்.ஏ. என்ற முறையில் ஆதரவு கொடுத்து இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டேன். உடனடியாக முதலமைச்சரும் அரசும் இந்த மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் இப்பகுதி பொதுமக்களே மதுக்கடையை அடித்து உடைத்து மூடும் சூழ்நிலை ஏற்படும். இப்பகுதி மக்களுக்கு ஆதரவாக நான் எப்போதும் உறுதுணையாக இருந்து மதுக்கடையை அகற்றும் வரை தொடர்ந்து போராடுவோம்" என அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.