Skip to main content

"இது மிகவும் ஆபத்தான திட்டம்" -மத்திய அரசை கடுமையாக விமர்சித்த ப.சிதம்பரம்...

Published on 25/11/2020 | Edited on 25/11/2020

 

p.chidambaram opposes reserve bank's suggestion on corporate banking scheme

 

 

பெருநிறுவனங்கள் வங்கிகளைத் துவங்கலாம் என்ற ரிசர்வ் வங்கியின் நிபுணர் குழு பரிந்துரைக்கு முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

 

தனியார் வங்கிகளின் உரிமையாளர்கள், பங்குதாரர்கள் ஆகியோருக்கான நெறிமுறைகளை மறு ஆய்வு செய்வதற்காக பி.கே.மொஹந்தி தலைமையிலான குழு கடந்த வாரம் தனது பரிந்துரைகளை ரிசர்வ் வங்கியிடம் வழங்கியது. இதில், பெருநிறுவனங்களும், தொழில் நிறுவனங்களும் வங்கிகள் தொடங்க உரிய சட்டத்திருத்த நடவடிக்கை எடுக்கலாம் என நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. மொஹந்தி குழுவின் இந்த பரிந்துரை, நாட்டின் நிதி அமைப்பில் கார்ப்பரேட் நிறுவனங்களின் தாக்கத்தை அதிகரிக்கும் எனக் கூறி பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. 

 

இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், "வங்கித் துறையில் மொத்த வைப்பு 140 லட்சம் கோடி ரூபாய். பெருநிறுவனங்கள் வங்கிகளை சொந்தமாக வைத்திருக்க அனுமதிக்கப்பட்டால், அவை ஒரு சிறிய பங்கு முதலீட்டில், நாட்டின் நிதி ஆதாரங்களில் மிகப்பெரிய அளவைக் கட்டுப்படுத்தும். வணிக நிறுவனங்களின் பிடியிலிருந்து வங்கிகள் மீட்டு 50 ஆண்டுகள் ஆகிறது. இந்த 50 ஆண்டுகளில் ஏற்பட்ட எண்ணற்ற நன்மைகளை, இந்த யோசனை சீர்குலைத்துவிடும். இந்த யோசனையை ரிசர்வ் வங்கி தெரிவிக்கவில்லை. இதில் மோடி அரசின் திட்டம் போலத் தெரிகிறது. ரிசர்வ் வங்கியைத் தவறாகப் பயன்படுத்தி, மத்திய அரசு தனது செயல்திட்டத்தை நிறைவேற்றப் பார்க்கிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கும் இதேபோல் ரிசர்வ் வங்கியைத் தவறாகப் பயன்படுத்தியது.

 

வங்கிகள் எப்போதும் பொதுத்துறையாகவே நீடிக்க வேண்டும். இந்த திட்டம், பொதுத்துறை வங்கிகளைப் பலவீனப்படுத்திவிடும். வங்கிகள் தொடங்கும் உரிமத்தை யார் பெறுவார்கள் என்று எல்லோருக்கும் தெரியும். அரசியல் தொடர்புடைய பெருநிறுவனங்களுக்குத்தான் உரிமம் கிடைக்கும். இது, வங்கிகளை கைக்குள் போட்டுக்கொள்ளும் சதித்திட்டம். ஆகவே, இந்த பிற்போக்குத்தனமான யோசனையை அமல்படுத்தக்கூடாது. இதைச் செயல்படுத்த மாட்டோம் என்று மத்திய அரசு உடனே அறிவிக்க வேண்டும். இந்த யோசனைக்கு எதிராக அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் ஆகியவற்றை அணுகி பொதுக்கருத்தை உருவாக்குவோம். இதை எல்லோரும் எதிர்க்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பேடிஎம் நிறுவனத்தின் தலைவர் பதவி விலகல்!

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
The president of Paytm resigned

பேடிஎம் நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக விஜய் ஷர்மா அறிவித்துள்ளார்.

அந்நிய முதலீடுகள் தொடர்பான விதிமுறைகளை பேடிஎம் பேமென்ட் வங்கி கடைப்பிடிக்கவில்லை எனத் தெரிவித்து பிப்ரவரி 29 ஆம் தேதி முதல் பேடிஎம் வங்கி வாடிக்கையாளர்களிடமிருந்து இருந்து பணத்தைப் பெறுவதற்கு இந்திய ரிசர்வ் வங்கி ஜனவரி 31 ஆம் தேதி தடை விதித்திருந்தது. அந்த உத்தரவில், வங்கிக் கணக்குகளில் புதிய தொகைகள் ஏதும் வரவு வைக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே சமயம் கடன் பரிவர்த்தனைகள், பேடிஎம் கணக்குகளில் பணச் செலுத்துகை, முன்கூட்டிய பணச் செலுத்துகை உள்ளிட்ட வங்கி சேவைகளுக்காக மார்ச் 15 வரை இந்த சேவைகளை தொடர ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ளது.

மேலும் பேடிஎம் நிறுவனத்தின் மீது சட்ட விரோதப் பணப் பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இத்தகைய சூழலில் பேடிஎம் நிறுவனம் இறங்குமுகத்தை சந்தித்து வருகிறது. இந்நிலையில் பேடிஎம் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக விஜய் சேகர் ஷர்மா அறிவித்துள்ளார். 

Next Story

“97 % ரூ.2000 நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டன” - ரிசர்வ் வங்கி தகவல்

Published on 01/01/2024 | Edited on 01/01/2024
97 % Rs 2000 notes withdrawn RBI Information

நாட்டில் புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகள் படிப்படியாகத் திரும்பப் பெறப்படும். டெபாசிட் மற்றும் இதர பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் பெற்றுக் கொள்ளலாம் என ஏற்கனவே ரிசர்வ் அறிவித்திருந்தது. மேலும் 2000 ரூபாய் நோட்டுகளை விநியோகிப்பதை உடனடியாக நிறுத்துமாறும் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற கடந்த அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருந்தது. அதன் பிறகும் ரூ.2000 நோட்டை மாற்ற முடியாதவர்கள், அக்டோபர் மாதம் 8 ஆம் தேதி முதல் ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் ரூ.20,000 வரை ரூ.2000 நோட்டை மாற்றிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. ரிசர்வ் வங்கி அறிவித்திருந்த 19 கிளைகளில் தனிநபரோ, நிறுவனமோ ரூ.2000 நோட்டுக்களை மாற்றிக்கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டது குறித்து ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “கடந்த டிசம்பர் 29 ஆம் தேதி வரை 3.56 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடைய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வங்கிகள் மூலம் திரும்ப பெறப்பட்டுள்ளன. இந்த மதிப்பு மொத்தமுள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் 97.38 சதவீதம் ஆகும். அதாவது 97.38 சதவீதம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ள நிலையில், இன்னும் 9 ஆயிரத்து 330 கோடி ரூபாய் மதிப்புடைய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மட்டும் மீதமுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.