Skip to main content

வங்கி ஒழுங்குமுறை திருத்த மசோதா நிறைவேற்றம்... ஆர்பிஐ கட்டுப்பாட்டிற்குள் வரும் கூட்டுறவு வங்கிகள்...

Published on 22/09/2020 | Edited on 22/09/2020

 

Parliament passes bill to bring co-operative banks under RBI supervision

 

நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் மசோதா, மாநிலங்களவையில் இன்று நிறைவேறியது.

 

நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கிக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது தொடர்பாக, மத்திய அரசு கடந்த ஜூன் 26-ஆம் தேதி அவசரச் சட்டம் பிறப்பித்தது. கூட்டுறவு வங்கிகளைப் பொறுத்தவரை மாநில அரசு சம்பந்தப்பட்டது என்பதால், அரசியல் சாசனத்தின்படி, நாடாளுமன்றத்திற்கு இதுசம்பந்தமாக சட்டம் இயற்ற அதிகாரம் இல்லை எனக் கூறி, மத்திய அரசின் இந்த முடிவிற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில், இந்த அவசரச் சட்டத்திற்கு மாற்றாக, இதுதொடர்பான சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு கடந்த புதன்கிழமை மக்களவையில் தாக்கல் செய்தது. இந்த மசோதா மக்களவையில் நிறைவேறிய நிலையில், இன்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

 

மாநிலங்களவையில் நடந்த விவாதத்தில் இந்தச் சட்டத்திருத்தம் குறித்துப் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "வங்கி ஒழுங்குமுறைச் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட இந்தத் திருத்தம் முழுமையாக வங்கி முதலீட்டாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டுதான் செய்யப்பட்டுள்ளது. வங்கிச் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ள கூட்டுறவு சொசைட்டிக்கு மட்டுமே இது பொருந்தும். கரோனா காலத்தில் பெரும் அழுத்தத்தில், நிதி நெருக்கடியில் சிக்கி இருக்கும் பல கூட்டுறவு வங்கிகளின் நிதிநிலையை ரிசர்வ் வங்கி உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. வர்த்தகரீதியான வங்கி விதிகளுக்கு உட்பட்டு இருந்ததால், யெஸ் வங்கியின் சிக்கலை அரசால் விரைவாகத் தீர்க்க முடிந்தது. ஆனால், பி.எம்.சி வங்கிச் சிக்கலை இன்னும் தீர்க்க முடியவில்லை" எனக் கூறினார். நிதியமைச்சரின் உரைக்குப் பின்னர் இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. 

 

Ad

 

இதன்படி கூட்டுறவுச் சங்க பதிவாளர்களின் கட்டுப்பாட்டிலிருந்து வந்த கூட்டுறவு வங்கிகள் அனைத்தும் இனி ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்படும். பொதுமக்களின் சேமிப்பு தொகைக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இந்தச் சட்டத்திருத்தத்தின் மூலம், 1,482 நகர்ப்புறக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் 58 பன்முக மாநிலக் கூட்டுறவு வங்கிகள் இனி ரிசர்வ் வங்கியில் கட்டுப்பாட்டிற்குள் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பேடிஎம் நிறுவனத்தின் தலைவர் பதவி விலகல்!

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
The president of Paytm resigned

பேடிஎம் நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக விஜய் ஷர்மா அறிவித்துள்ளார்.

அந்நிய முதலீடுகள் தொடர்பான விதிமுறைகளை பேடிஎம் பேமென்ட் வங்கி கடைப்பிடிக்கவில்லை எனத் தெரிவித்து பிப்ரவரி 29 ஆம் தேதி முதல் பேடிஎம் வங்கி வாடிக்கையாளர்களிடமிருந்து இருந்து பணத்தைப் பெறுவதற்கு இந்திய ரிசர்வ் வங்கி ஜனவரி 31 ஆம் தேதி தடை விதித்திருந்தது. அந்த உத்தரவில், வங்கிக் கணக்குகளில் புதிய தொகைகள் ஏதும் வரவு வைக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே சமயம் கடன் பரிவர்த்தனைகள், பேடிஎம் கணக்குகளில் பணச் செலுத்துகை, முன்கூட்டிய பணச் செலுத்துகை உள்ளிட்ட வங்கி சேவைகளுக்காக மார்ச் 15 வரை இந்த சேவைகளை தொடர ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ளது.

மேலும் பேடிஎம் நிறுவனத்தின் மீது சட்ட விரோதப் பணப் பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இத்தகைய சூழலில் பேடிஎம் நிறுவனம் இறங்குமுகத்தை சந்தித்து வருகிறது. இந்நிலையில் பேடிஎம் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக விஜய் சேகர் ஷர்மா அறிவித்துள்ளார். 

Next Story

“97 % ரூ.2000 நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டன” - ரிசர்வ் வங்கி தகவல்

Published on 01/01/2024 | Edited on 01/01/2024
97 % Rs 2000 notes withdrawn RBI Information

நாட்டில் புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகள் படிப்படியாகத் திரும்பப் பெறப்படும். டெபாசிட் மற்றும் இதர பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் பெற்றுக் கொள்ளலாம் என ஏற்கனவே ரிசர்வ் அறிவித்திருந்தது. மேலும் 2000 ரூபாய் நோட்டுகளை விநியோகிப்பதை உடனடியாக நிறுத்துமாறும் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற கடந்த அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருந்தது. அதன் பிறகும் ரூ.2000 நோட்டை மாற்ற முடியாதவர்கள், அக்டோபர் மாதம் 8 ஆம் தேதி முதல் ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் ரூ.20,000 வரை ரூ.2000 நோட்டை மாற்றிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. ரிசர்வ் வங்கி அறிவித்திருந்த 19 கிளைகளில் தனிநபரோ, நிறுவனமோ ரூ.2000 நோட்டுக்களை மாற்றிக்கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டது குறித்து ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “கடந்த டிசம்பர் 29 ஆம் தேதி வரை 3.56 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடைய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வங்கிகள் மூலம் திரும்ப பெறப்பட்டுள்ளன. இந்த மதிப்பு மொத்தமுள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் 97.38 சதவீதம் ஆகும். அதாவது 97.38 சதவீதம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ள நிலையில், இன்னும் 9 ஆயிரத்து 330 கோடி ரூபாய் மதிப்புடைய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மட்டும் மீதமுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.