
கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இத்தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு பாகிஸ்தானில் உள்ள லஷ்கர்-இ தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பின் துணை அமைப்பு தான் காரணம் என்பது தெரிய வந்தது. இந்த சம்பவத்தின் எதிரொலியாக 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற தாக்குதலை இந்தியா மேற்கொண்டிருந்தது.
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் கூடாரங்கள் குறிவைத்து இந்திய ராணுவத்தால் தாக்கி அழிக்கப்பட்டது. இந்நிலையில் தொடர்ந்து இந்த சம்பவத்தில் தேசிய புலனாய்வு முகமை விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் தீவிரவாதிகளுக்கு உணவு, இருப்பிடம் கொடுத்து அடைக்கலம் கொடுத்ததாக இரண்டு பேரை தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ளது. பர்வேஷ் அகமது, பஷீர் அகமது ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
ஏற்கனவே 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து பாகிஸ்தானிற்காக உளவு பார்த்து தகவல் அளித்ததாக யுடியூபர்கள் உள்ளிட்ட பலர் கைதாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.