Organised Crime and Corruption Reporting Project accuses Adani group

அமெரிக்காவைச் சேர்ந்த நிதி ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம், அதானி குழுமம் முறைகேடுகளில் ஈடுபடுவதாகக் கடந்த பிப்ரவரி மாதம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த ஆய்வறிக்கையில் பங்கு முறைகேடு, பங்கின் மதிப்பினை உயர்த்திக் காட்டி அதிக கடன் பெறுதல், போலி நிறுவனங்கள் துவங்கி வரி ஏய்ப்பு செய்தது போன்ற குற்றச் செயல்களில் அதானி குழுமம் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இது இந்தியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாகஉச்சநீதிமன்ற கண்காணிப்பில் இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Advertisment

இந்நிலையில், ஹிண்டன்பர்க்கை தொடர்ந்து அதானி நிறுவனத்தின் மீது மேலும் ஒரு புதிய மோசடி குற்றச்சாட்டை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் ஊழல் தடுப்பு (Organised Crime and Corruption Reporting Project) என்ற அமைப்பு முன்வைத்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மொரிஷியஸில் இருந்து போலி நிறுவனங்கள் மூலம் இருவர் முறைகேடாக சுமார் 430 மில்லியன் டாலர் மதிப்பிலான தொகைக்கு அதானி நிறுவனத்தின் பங்குகளை வாங்கியும் விற்றும் உள்ளதாக குற்றம்சாட்டியுள்ளது. அதானி குடும்பத்துடன் நீண்ட காலமாகத் தொடர்பிலிருந்து வரும் நாசர் அலி சபான் அலி, சாங் சுங் லிங் ஆகிய இருவரும் அதானி பங்குகளை வெளிநாட்டு நிறுவனம் மூலம் வாங்கி மொரிஷியஸ் போன்ற நாடுகளில் முறைகேடாக விற்றதாகவும், அதன் மூலம் அதானி குழுமத்திற்கு அதிகளவில் வருவாய் கிடைத்ததாகவும் கூறப்பட்டுள்ளது. நாசர் அலி சபான் அலி, சாங் சுங் லிங் ஆகிய இருவரும் அதானியின் மூத்த சகோதரர் வினோத் அதானியின் நிறுவனங்களில் இயக்குநர்களாகவும், பங்குதாரர்களாகவும் இருந்துள்ளனர். மேலும், இந்த மோசடி அதானி குழுமத்தின் இ-மெயில் தகவல்கள் மற்றும் மொரிஷியஸ் போன்ற நாடுகளிலிருந்து கிடைக்கப் பெற்ற ஆவணங்களை அடிப்படையாக வைத்து கண்டறியப்பட்டதாக ஓசிசிஆர்பி(OCCRP) அமைப்பு தெரிவித்துள்ளது.

Advertisment

ஓசிசிஆர்பி வெளியிட்டுள்ளமோசடி குற்றச்சாட்டை அதானி குழுமம் முற்றிலுமாக மறுத்துள்ளது. “உண்மைகள் அற்ற ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் அறிக்கையைப் போலவே ஓசிசிஆர்பி அமைப்பும் பொய் குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளது. அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்புகளைக் குறைத்து, மற்ற நிறுவனங்களின் மதிப்பை உயர்த்தும் நோக்கிலேயே இதுபோன்ற போலியான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன” என்று அதானி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹிண்டன்பர்க் அறிக்கையின் சர்ச்சையே இன்னும் ஓயாமல் இருக்க ஓசிசிஆர்பி அமைப்பின் குற்றச்சாட்டு மேலும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

இது தொடர்பாக பேசிய ராகுல் காந்தி, “அதானி குழுமம் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக ஓசிசிஆர்பி அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின் படி இந்தியாவில் இருந்து கோடிக்கணக்கான பணம் வெளிநாடுகளுக்குச் சென்று மீண்டும் இந்தியாவிற்குத் திரும்பியுள்ளது. அந்த பணம் யாருடையது? அதானியின் சகோதரர் வினோத் அதானியும், அவருடன் சேர்ந்து இரண்டு வெளிநாட்டவர்களும் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். அந்த இரண்டு வெளிநாட்டவர்கள் எவ்வாறு அனுமதிக்கப்பட்டார்கள்? இதில் தனக்குத் தொடர்பு இல்லை என்பதைப் பிரதமர் மோடி நிரூபிக்க வேண்டும். பிரதமர் ஏன் அமைதியாக இருக்கிறார்.”என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.

வரும் செப்.18ம் தேதி சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடர் கூடவிருக்கிறது. இந்நிலையில், இந்த விவகாரம் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த கூட்டத்தொடருக்கு முன்பான கூட்டத்தொடரில் அதானிக்கும் மோடிக்கும் தொடர்பு என்றும்பல கோடி ரூபாய் முறைகேடு என்றும்ராகுல் கடுமையாகச் சாடினார். இதன் நீட்சியாக கூட்டத்தொடர் முறையாக நடக்காமல் முடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சிறப்புக் கூட்டத்தொடரிலும் இந்த 430 மில்லியன் டாலர் விவகாரம் பூதாகரம் அடையும் எனச் சொல்லப்படுகிறது.