Skip to main content

போராட்டக்களத்தில் எதிர்க்கட்சிகளுடன் விவசாயிகளை சந்திக்கவிருக்கும் ராகுல் காந்தி!

Published on 06/08/2021 | Edited on 06/08/2021

 

OPPOSITE MP'S MEET

 

இந்தியா உட்பட உலகம் முழுவதும் பல்வேறு பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரது தொலைபேசிகள் பெகாசஸ் உளவு மென்பொருளால் ஹேக் செய்யப்பட்டு, ஒட்டுக் கேட்கப்பட்டதாக பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. இந்திய எதிர்க்கட்சிகள் இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பிவருகின்றனர். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அவர்கள் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர். பெகாசஸ் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்பி நாடாளுமன்றத்தையும் அவர்கள் தொடர்ந்து முடக்கிவருகின்றனர்.

 

இருப்பினும் எதிர்க்கட்சியினர் அமளிக்கு இடையே மத்திய அரசு, சில சட்டங்களை நிறைவேற்றிவருகிறது. மேலும் மத்திய அரசு, நாடாளுமன்றத்தை இடையூறின்றி செயல்படவிடுமாறு எதிர்க்கட்சிகளிடம் கோரிக்கை விடுத்துவருகிறது. ஆனால் பெகாசஸ் விவகாரம், விவசாயிகள் பிரச்சனை, பணவீக்கம் உள்ளிட்ட பிரச்சனைகளை விவாதிக்க வேண்டும் என கூறி, மத்திய அரசின் கோரிக்கையை எதிர்க்கட்சிகள் நிராகரித்துவருகின்றனர்.

 

இந்தநிலையில் இன்று (06.08.2021) எதிர்க்கட்சிகள், புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரும் விவசாயிகளின் கோரிக்கையை ஆதரிக்கும் விதமாக, அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜந்தர் மந்தர் பகுதிக்குச் சென்று அவர்களை சந்திக்கவுள்ளதாக மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். மேலும், ராகுல் காந்தியும் விவசாயிகளை சந்திக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதற்கிடையே நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றுவருகிறது. இதில் ராகுல் காந்தியும் கலந்துகொண்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்