Skip to main content

கரோனா தடுப்பூசி மரணம்: தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகு இதனை செய்ய வேண்டும் - கரோனா பணிக்குழு தலைவர் அறிவுறுத்தல்!

Published on 16/06/2021 | Edited on 16/06/2021

 

CORONA VACCINE

 

இந்தியாவில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட சிலருக்கு காய்ச்சல் போன்ற பக்கவிளைவுகள் ஏற்பட்டு, சில நாட்களில் குணமாகிவிடுகிறது. இதற்கிடையே கரோனா தடுப்பூசியால் ஏற்பட்ட முதல் மரணத்தை இந்தியா நேற்று (15.06.2021) உறுதிசெய்தது.

 

நோய்த்தடுப்பு மருந்துகளால் தொடர்ந்து ஏற்படும் பாதகமான நிகழ்வுகளைக் கண்காணிக்கும் குழு, கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகு கடுமையான பாதிப்புக்குள்ளான 31 வழக்குகளை ஆய்வுசெய்தது. இந்த ஆய்வில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட மூவருக்கு அனாபிலாக்ஸிஸ் என்ற கடுமையான ஒவ்வாமை ஏற்பட்டதாக அந்தக் குழு கூறியுள்ளது. அந்த மூவரில் ஒருவர் இறந்துவிட்டதாகவும் பாதகமான நிகழ்வுகளை ஆய்வுசெய்யும் அரசின் குழு தெரிவித்துள்ளது.

 

இந்தநிலையில், நோய்த்தடுப்பு தொடர்பான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் கீழ் செயல்படும் கரோனா பணிக்குழு தலைவர் டாக்டர் என்.கே. அரோராவிடம் கரோனா தடுப்பூசியால் ஏற்பட்ட மரணம் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர், "கரோனா தடுப்பூசியுடன் தொடர்புபடுத்தப்பட்ட முதல் மரணம் இதுவாகும். இது அனாபிலாக்ஸிஸ் (கடுமையான ஒவ்வாமை) பாதிப்பால் ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகு, தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் தடுப்பூசி மையத்தில் 30 நிமிடங்கள் காத்திருக்க வேண்டியதன் அவசியத்தை இது மீண்டும் வலியுறுத்துகிறது. பெரும்பாலான அனாபிலாக்டிக் எதிர்வினைகள் இந்தக் காலகட்டத்தில் நிகழ்கிறது. உடனடி சிகிச்சையானது இறப்புகளைத் தடுக்கும்" என தெரிவித்துள்ளார்.

 

இதற்கிடையே கரோனா தடுப்பூசிக்குப் பிறகான மரணங்கள் குறித்து மத்திய சுகாதாரத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “23.5 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்ட நிலையில், தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகு இறந்தவர்களின் எண்ணிக்கை 0.0002 சதவீதம் ஆகும். கரோனாவால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் விகிதம் 1 சதவீதத்திற்கும் அதிகமாகும். மேலும், கரோனா தடுப்பூசியால் இந்த இறப்புகளைத் தடுக்க முடியும் என்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டியது அவசியம். எனவே கரோனா பாதிப்பால் இறக்கும் அபாயத்தைக் காட்டிலும் கரோனா தடுப்பூசியால் உயிரிழக்கும் அபாயம் மிகவும் குறைவு” என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  

 

மேலும், கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகு ஏற்படும் அனைத்து மரணங்களுக்கும், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நிகழ்வுகளுக்கும் தடுப்பூசியே காரணம் என கருத முடியாது எனவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘ஒருவரிடம் இருந்து 18 பேருக்கு பரவும் தன்மை; அடுத்த 40 நாட்கள் மிக முக்கியமானது’ - சுகாதாரத்துறை தகவல்

Published on 29/12/2022 | Edited on 29/12/2022
'One-to-18 transmission; next 40 days critical' - health department shock

 

உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் லட்சக்கணக்கான உயிர்ப்பலிகளை வாங்கியது. அதன் பிறகு தடுப்பூசி, ஊரடங்கு, தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை மூலம் கட்டுப்பாட்டிற்குள் வந்த கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் ‘பி.எஃப்.7’ என உருமாறி அதன் புதிய அலையைத் தொடங்கியுள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

 

இந்தியாவிலும் புது வகை கொரோனா பரவல் தொடர்பான அச்சம் மேலோங்கி வரும் நிலையில், மாநில அரசுகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத்திய அரசு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன் காரணமாக மாநிலங்களில், குறிப்பாக சர்வதேச விமான நிலையங்களில் தீவிரக் கட்டுப்பாடுகள் மற்றும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசுகள் நடைமுறைப்படுத்தி வருகின்றன.

 

இந்த நிலையில், இந்தியாவில் புதுவகை கொரோனா பரவலைத் தடுப்பதில் அடுத்த 40 நாட்கள் மிகவும் முக்கியம் வாய்ந்தது என சுகாதாரத்துறை கருதுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக வரும் ஜனவரி மாதம் மத்தியில் இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று சுகாதாரத்துறை கருதுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கரோனா அலை ஒன்று, இரண்டு ஆகியவற்றின் போக்குகளின் அடிப்படையில் இந்தக் கணிப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

 

கடந்த சில நாட்களில் மட்டும் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்த 40 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய வகை கொரோனா மனிதர்களிடையே தொற்றும் விகிதம் அதிகமாக உள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். முன்பிருந்த கொரோனா தொற்றுகள் ஒருவரிடம் இருந்து சராசரியாக 5 முதல் 6 பேருக்கு பரவும் வேகத்தைக் கொண்டிருந்த நிலையில், தற்போது பரவி வரும் புது வகை ‘பி.எஃப்.7’ கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து 10 முதல் 18 பேருக்கு பரவும் எனவும் எய்ம்ஸ் மருத்துவர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

 

 

Next Story

கரோனா தடுப்பூசிகள் விலை குறைப்பு!

Published on 09/04/2022 | Edited on 09/04/2022

 

Corona vaccine price reduction!

 

நாடு முழுவதும் நாளை (10/04/2022) முதல் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் எனப்படும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் நிலையில், அவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளது. 

 

தனியார் மருத்துவமனைகளும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், கரோனா தடுப்பூசி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் விலையைக் குறைத்துள்ளனர். அதன்படி, கோவிஷீல்டு தடுப்பூசி ஒரு டோஸுக்கு ரூபாய் 600 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை ரூபாய் 225 ஆக சீரம் இன்ஸ்டிடூட் ஆஃப் இந்தியா குறைத்துள்ளது. இதேபோல், கோவாக்சின் மருந்தின் விலையையும் ரூபாய் 1,200- லிருந்து ரூபாய் 225 ஆக பாரத் பயோடெக் நிறுவனம் குறைத்து நிர்ணயித்துள்ளது. 

 

இதனுடன் மருத்துவமனைகள் சேவைக் கட்டணமாக, ரூபாய் 150 வசூலித்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.