One country Single Election Consultation on 25th October

பல வருடங்களாகவே 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' என்ற கூற்றை மத்திய பாஜக அரசு வெளிப்படுத்தி வருகிறது. இந்த நிலையில், 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தர சிறப்புக் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்திருந்தது. முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில், இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. மக்களவை மற்றும் சட்டசபைத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து இந்த குழு ஆய்வு செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Advertisment

அதனைத் தொடர்ந்து முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் 8 பேர் கொண்ட உறுப்பினர்களை நியமித்து அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. இந்த குழுவில் காங்கிரஸ் கட்சியின் மக்களவை குழுத் தலைவர் ஆதிரஞ்சன் சவுத்ரி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் குலாம்நபி ஆசாத், திட்டக்குழுவின் முன்னாள் தலைவர் என்.கே. சிங், மக்களவையின் முன்னாள் செயலாளர் சுபாஷ் காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். அதே சமயம் ஒரே நாடு, ஒரே தேர்தல் நடத்துவது குறித்து விரைவாக அறிக்கை அளிக்க இக்குழுவிற்கு மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது.

Advertisment

இந்த சூழலில் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதி (23.09.2023) ராம்நாத் கோவிந்த் தலைமையில் டெல்லியில் உள்ள ஜோத்பூர் விடுதியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குலாம் நபி ஆசாத் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் குறித்த பூர்வாங்க நடவடிக்கை மேற்கொள்வது பற்றி ஆலோசிக்கப்பட்டதாகவும், இந்தத் திட்டம் செயல்படுத்துவது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' குறித்து ராம்நாத் கோவிந்த் தலைமையில் அக்டோபர் 25 ஆம் தேதி (25.10.2023) அடுத்தகட்ட ஆலோசனை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.