Skip to main content

சசிகலா குறித்த கேள்விக்கு 'அய்யோ.. சாமி' என்று கூறி நழுவிய ஓ.பன்னீர்செல்வம்!

Published on 07/03/2022 | Edited on 07/03/2022

 

வஸல

 

சசிகலா குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு 'அய்யோ.. சாமி' என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியபடி  விலகிச்சென்ற சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

பெரியகுளம் அருகே உள்ள பண்ணை வீட்டில் மாவட்ட நிர்வாகிகளுடன் சில நாட்களுக்கு முன்பு நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் சசிகலா மற்றும் தினகரனை கட்சியில் சேர்க்க வேண்டும் என்று நிர்வாகிகள் கோரிக்கை வைத்ததற்கு ஓ.பி.எஸ். பச்சைக்கொடி காட்டியதாகத் தகவல் வெளியானது. இந்த செய்தி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்த நிலையில், முன்னாள் அமைச்சர் உதயகுமாரில் தொடங்கி தேனி மாவட்ட முக்கிய பிரமுகர்கள், ஓ.பி.எஸ்.சை கூட்டம் நடந்த அன்றைய தினம் அடுத்தடுத்து பண்ணை வீட்டில் சந்தித்துப் பல மணி நேரம் ஆலோசனை செய்தனர். இது ஒருபுறம் நடைபெற்ற நிலையில், இரண்டு தினங்களுக்கு முன்பு பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா சசிகலா திருச்செந்தூரில் சந்தித்துப் பேசினார். 

 

இந்த சந்திப்பு நடைபெற்ற சில மணி நேரங்களிலேயே ஓ.ராஜாவை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி மற்றும் பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டனர். நீக்கத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ராஜா, எடப்பாடி மற்றும் பன்னீர்செல்வத்தை மிகவும் கடுமையாகத் தாக்கிப் பேசினார். " குறிப்பாக இவர்கள் இருவரும் இரட்டை குழல் துப்பாக்கிகள் என்று சொல்கிறார்கள், ஆனால் உண்மையில் இருவரும் தீபாவளி துப்பாக்கி" என்று பேசினார். இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஓ.பன்னீர்செல்வத்திடம் இதுதொடர்பாக கேள்வி எழுப்பினர், இதற்கு பதிலளித்துக்கொண்டிருந்த அவரிடம் செய்தியாளர் ஒருவர் "சசிகலா" என்று வார்த்தையைச் சொன்னதும், ”அய்யோ... சாமி” என்று கூறியபடி அங்கிருந்து வேகமாக நடந்து சென்றார்.

 

 

சார்ந்த செய்திகள்