Skip to main content

குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியா? - சரத் பவார் விளக்கம்!

Published on 15/07/2021 | Edited on 15/07/2021

 

SHARAD PAWAR

 

இந்திய குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் பதவி வகித்துவரும் நிலையில், அவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து அடுத்த ஆண்டு குடியரசுத் தலைவருக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தநிலையில், தேசியவாத காங்கிரஸ் தலைவரும், மூத்த அரசியல்வாதியுமான சரத் பவார், குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடப்போவதாக தகவல் வெளியானது.

 

மேலும், அண்மையில் பிரஷாந்த் கிஷோரும் ராகுல் காந்தியும் சந்தித்தபோது சோனியா காந்தியும், பிரியங்கா காந்தியும் உடனிருந்ததாகவும், அப்போது சரத் பவாரை குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்தநிலையில், இந்த தகவல்களை சரத் பவார் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

 

இதுதொடர்பாக அவர், "குடியரசுத் தலைவர் தேர்தலில் நான் வேட்பாளர் என்பது முற்றிலும் தவறானது. ஒரு கட்சிக்கு (பாஜகவிற்கு) 300 எம்.பிக்கள் இருக்கும்போது தேர்தலின் முடிவு என்ன என்பது எனக்குத் தெரியும்" என கூறியுள்ளார். தொடர்ந்து பிரசாந்த் கிஷோருடனான சந்திப்பு குறித்து பதிலளித்த அவர், "பிரசாந்த் கிஷோர் என்னை இரண்டுமுறை சந்தித்தார். ஆனால் நாங்கள் அவரது நிறுவனத்தை பற்றி மட்டுமே பேசினோம். 2024 தேர்தலில் தலைமை வகிப்பது பற்றியோ, குடியரசுத் தலைவர் தேர்தலைப் பற்றியோ எந்த உரையாடலும் நடைபெறவில்லை" என கூறியுள்ளார்.

 

மேலும் சரத் பவார், "2024 தேர்தல் பற்றியோ மஹாராஷ்ட்ரா மணிலா தேர்தல் பற்றியோ எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. தேர்தலுக்கு நீண்டகாலம் இருக்கிறது. அரசியல் சூழ்நிலை தொடர்ந்து மாறிக்கொண்டிருக்கும். நான் 2024 தேர்தலில் எந்த தலைமைப் பொறுப்பையும் வகிக்கப்போவதில்லை" எனவும் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.