Skip to main content

டெல்லி கலவரம்; 'குட்டு' வைத்த உச்சநீதிமன்றம்...

Published on 26/02/2020 | Edited on 26/02/2020

கடந்த ஆண்டு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மோடி அரசு ரத்து செய்தபோது, இந்திய வரைபடத்தின் தலைப்பகுதியாக இருக்கும் காஷ்மீர் தீப்பற்றி எரிந்தது. ஊரடங்கு உத்தரவு, செல்போன் சேவை ரத்து, இணைய சேவை துண்டிப்பு, பள்ளிக்கூடம் மூடல் என அந்த மாநிலமே  அல்லோலகல்லோலப்பட்டது.   தற்போது, அதற்கு சற்றும் குறைவில்லாமல் கொதிநிலையில் இருக்கிறது டெல்லி மாநகரம்.  

 

northeast delhi caa issue

 

 

மத்திய அரசின் சி.ஏ.ஏ. சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி ஷாகின்பாக் பகுதியில் இஸ்லாமிய சமுதாயத்தினர் அறவழிப்போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பிப். 19-ம் தேதி வாரணாசியில் உரை நிகழ்த்திய மோடி, குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். 

இந்நிலையில்,  பிப். 23-ம் தேதி டெல்லி பஜன்புரா பகுதியில் சிஏஏ ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது, சிஏஏ ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, இரு தரப்பினரும் கற்களால் தாக்கிக்கொண்டனர். சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கி  தீ வைத்தனர். அதனைத் தொடர்ந்து, போலீஸார் தடியடி நடத்தியும், துப்பாக்கிச் சூடு நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். 

நிலைமை மெல்ல கட்டுக்குள் வந்த நிலையில், மறுநாள் பிப். 24-ம் தேதி மீண்டும் போராட்ட களத்தில் வன்முறை ஏற்பட்டது. ரத்தன்லால் என்ற போலீஸ்காரர் கல்வீச்சு சம்பவத்தில் உயிரிழக்க, காவல் துணை ஆணையர் ஒருவர் காயமடைந்தார். இதையடுத்து, லத்திசார்ஜ், கண்ணீர்புகை குண்டுகளை வீசி கலவரக்கும்பலை விரட்டி அடித்தது டெல்லி போலீஸ். சேதி கேட்டு அகமதாபாத்தில் இருந்து டெல்லி விரைந்தார்  பிரதமர் நரேந்திரமோடி. 

இதற்கிடையே அகமதாபாத் - ஆக்ரா பயணத்தை முடித்துக் கொண்டு அமெரிக்க அதிபர் டிரம்பும் டெல்லி வந்து சேர்ந்ததால், ஒரு வித பரபரப்பு தொற்றிக் கொண்டது. பிப். 25-ஆம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் வரவேற்பு, காந்தி சமாதியில் அஞ்சலி, ஐதராபாத் இல்லத்தில் மோடியுடன் முக்கிய பேச்சுவார்த்தை, தொழில் துறையினருடன் ஆலோசனை என  ‘ஷெட்யூல்’  பிரகாரம்  நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 

 

northeast delhi caa issue

 

மறுபுறம்,  வடகிழக்கு டெல்லியான கர்தாம்பூரி, ஜாப்ராபாத், சாந்த் பாக், மாஜ்பூர், ஷீலாம்பூர் பகுதிகள் கலவரக்காடாக மாறின.  வாகனங்களுக்கு தீ வைப்பு, பொதுச் சொத்துக்கள் சேதம், வழிபாட்டு மையங்கள் மீது தாக்குதல் என கலவர பூமியாக மாறியது.  இதனால் 6 இடங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.  

இருப்பினும்,  அடுத்தடுத்து நிகழ்ந்த உயிரிழப்புகளால் புதன்கிழமை முற்பகல் நிலவரப்படி பலி எண்ணிக்கை 21-ஆக உயர்ந்துவிட்டது. பத்திரிகையாளர்கள், போலீஸ்காரர்கள் உட்பட 150-க்கும் மேற்பட்டவர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் ஷீலாம்பூர் காவல் துணை ஆணையரிடம் ஆலோசனை நடத்தினார். டெல்லியின் சிறப்பு காவல் ஆணையராக ஸ்ரீவத்சவா நியமிக்கப்பட்டுள்ளார்.  இதனால் எந்த பலனும் இல்லை. இந்த நடவடிக்கைகளுக்குப் பிறகும் 7 பேர் கலவரத்தில் கொல்லப்பட்டுள்ளனர்.  

 

northeast delhi caa issue

 

பூட்டியிருந்த கடைகளை உடைத்து உள்ளே இருந்த பொருட்களை அள்ளிச் சென்ற கலவரக் கும்பல் அதனைப் படம் பிடித்த பத்திரிகையாளர்களையும் விரட்டி விரட்டித் தாக்கியதாக,  டெல்லியில் உள்ள பத்திரிகை நண்பர்கள் நம்மிடம் தெரிவித்தனர். 

25-ம் தேதி காவல்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்திய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், "பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.  பின்னர் அவரே நிலைமை எல்லை மீறிப்போய்விட்டது. டெல்லி போலீஸால் கலவரத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ராணுவத்தை அனுப்பி வையுங்கள்" என்று உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பி வைத்தார். 
 
ஆனால், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இதுகுறித்து ஒரு வேண்டுகோள்கூட விடுக்கவில்லை.  ‘மக்களே! அமைதியாக இருங்கள், வன்முறையில் ஈடுபடாதீர்கள்.’ என்று ஒரு வார்த்தைகூட இந்த நிமிடம் வரை சொல்லவில்லை. உள்துறை அமைச்சர் அமித்ஷா காவல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதோடு சரி. 

இதற்கிடையே, புதன்கிழமை காங்கிரஸ் காரியக்கமிட்டி கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியாகாந்தி, மன்மோகன்சிங், மாஜி மந்திரிகள் ஏ.கே.அந்தோனி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு, இறந்தவர்களுக்காக அனுதாபம் தெரிவித்து மவுன அஞ்சலி செலுத்தினர்.  ராகுல்காந்தி  ஏனோ ஆப்செண்ட்.  

இதற்கிடையே, டெல்லி கலவரம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம்,  கலவரத்தைக் கட்டுப்படுத்த டெல்லி போலீஸ் தவறிவிட்டதாக நறுக்கென்று தலையில் 'குட்டு' வைத்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

ராமர் படம் கொண்ட தட்டில் பிரியாணி; வைரல் வீடியோவால் பரபரப்பு!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Action against the shop owner on Biryani on Ram's paper plate set

டெல்லி ஜகாங்கிர்புரி பகுதியில் பிரபல ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலில் கடந்த 21ஆம் தேதி அன்று ராமர் உருவம் கொண்ட தட்டுகளில் பிரியாணி பரிமாறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், ‘ராமர் படத்துடன் கூடிய காகித தட்டுகளில் பிரியாணி பரிமாறப்படுகிறது. மேலும், அந்தத் தட்டுக்கள் குப்பை தட்டுகளிலும் வீசப்படுவதாக’ காட்டப்படுகிறது.  தூக்கி எறியும் தட்டுகளில் ராமரின் உருவங்களைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, கடையில் பொதுமக்கள் கூடி எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், தகவல் அறிந்ததும் உள்ளூர் மக்களும், பஜ்ரங் தள் உறுப்பினர்களும் அந்தத் தட்டுகளில் பிரியாணி விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு, காவல்துறையிலும் புகார் அளித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கடை உரிமையாளரைக் கைது செய்தனர். இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், ‘காகிதத் தட்டுகளின் மூட்டையிலிருந்து ஒன்று அல்லது இரண்டு தட்டுகளில் ராமரின் புகைப்படங்கள் இருந்தன எனக் கூறியுள்ளனர். மேலும் ஜஹாங்கிர்புரி காவல் நிலையம் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறது’ எனத் தெரிவித்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மார்க்கெட்டிங் நோக்கத்திற்காக இதைச் செய்தார்களா? அல்லது வேறு எதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.