Skip to main content

"மூன்று நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு வாக்குரிமை அளிக்கக் கூடாது" - அரசு கொறடா அனந்தராமன் கோரிக்கை!

Published on 22/02/2021 | Edited on 22/02/2021

 

puducherry assembly floor test mlas arrived assembly

 

மொத்தம் 33 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டது புதுச்சேரி சட்டப்பேரவை. இதில் 30 உறுப்பினர்கள் மக்களால் சேர்ந்தெடுக்கப்படுவர். மற்ற மூன்று உறுப்பினர்கள், நியமன உறுப்பினர்கள் ஆவர்.  இந்த நிலையில் ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 5 பேர் தங்களுடைய சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். அதேபோல், காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தி.மு.க. எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான வெங்கடேசன், தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஏற்கனவே, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் தனவேலு தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 

 

இதனால் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசுக்கு, ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 12 ஆக குறைந்துள்ளது. அதேசமயம் எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் மூன்று நியமன சட்டமன்ற உறுப்பினர்களையும் சேர்த்து மொத்தம் 14 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இதையடுத்து, காங்கிரஸ் அரசு தனது பெரும்பான்மையை இழந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்ததையடுத்து, துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவின்படி, சட்டப்பேரவையில் இன்று (22/02/2021) பெரும்பான்மையை நிரூபிக்க சிறப்புக் கூட்டம் நடத்தப்படுவதாக சபாநாயகர் அறிவித்திருந்தார்.

 

அதன்படி. இன்று காலை 10.00 மணியளவில் சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் சுயேச்சை, நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் சட்டப்பேரவைக்கு வந்துள்ளனர். இந்த நிலையில் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பார்களா? இதுகுறித்து சபாநாயகர் என்ன முடிவு எடுப்பார் என்ற கேள்வி எல்லோர் மத்தியிலும் எழுந்துள்ளது.

puducherry assembly floor test mlas arrived assembly

 

இதுகுறித்து காங்கிரஸ் கட்சி உறுப்பினரும் சட்டப்பேரவை அரசு கொறடாவுமான ஆர்.கே.ஆர். அனந்தராமன் கூறும்போது, "நியமன எம்.எல்.ஏ.க்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல. குறிப்பாக என்னை எதிர்த்து போட்டியிட்டு 147 வாக்குகளே வாங்கி தோல்வியடைந்த தங்க.விக்ரமன் நியமன எம்.எல்.ஏவாக நியமிக்கப்பட்டுள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நான் வாக்களிக்களிப்பதும், மக்களால் நிராகரிக்கப்பட்டவரும் வாக்களிப்பதும் மக்களாட்சிக்கு எதிரானது. மேலும் ஜனாதிபதி தேர்தலில் நியமன எம்.எல்.ஏக்களுக்கு வாக்குரிமை அளிக்கப்படவில்லை. எனவே, இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ள அனுமதிக்கக் கூடாது என்று சபாநாயகரிடம் வலியுறுத்துவோம். நாங்கள் பெரும்பான்மை உறுப்பினர்கள் இருக்கிறோம். எதிரணியில் குறைவாக இருக்கிறார்கள். நாங்கள் வெற்றிபெறுவோம்" என்றார்.

 

அதைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் கூறும்போது, "நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு வாக்களிக்கும் உரிமை அளிக்கலாம் என உச்சநீதிமன்றமும் தேர்தல் ஆணையமும் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, அவர்களுக்கு வாக்குரிமை அளிக்கப்படும். காங்கிரஸ் அரசு பெரும்பான்மை இழக்கும். எனவே நாராயணசாமி பெரும்பான்மை இழப்பதற்கு முன்னதாகவே தமது பதவியை ராஜினாமா செய்வது நல்லது"  என்றார்.

 

பரபரப்பான சூழ்நிலையில் காங்கிரஸ் அரசு தப்பிக்குமா? கவிழுமா? என புதுச்சேரி மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

Next Story

லிஸ்டில் உள்ள 737 பேர்; இன்றே கடைசி நாள்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
737 people on the list; Today is the last day

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

மார்ச் 20 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யக் கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று கடைசி நாளாகும். தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் உட்பட 102 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நிறைவு பெறுகிறது. நாளை வேட்புமனு பரிசீலனை நடைபெறுகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் தமிழ்நாட்டில் இதுவரை 737 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 39 தொகுதிகளில் இதுவரை ஆண்கள் 628 பேரும், பெண்கள் 109 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.