"நாம் செய்யும் இதனை பாகிஸ்தான் செய்வதில்லை" - ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேச்சு!

rss chief

அசாம் மாநிலத்திற்கு இரண்டுநாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், சி.ஏ.ஏ மற்றும் என்.ஆர்.சி குறித்த புத்தகம் ஒன்றை வெளியிட்டார். அப்போது பேசிய அவர், சி.ஏ.ஏ-வால் இந்திய முஸ்லிம்கள் எந்த இழப்பையும் சந்திக்கமாட்டார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

புத்தக வெளியீட்டின் போது ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியது வருமாறு;

மதச்சார்பின்மை, சோஷலிசம், ஜனநாயகம் ஆகியவற்றை நாம் உலகிலிருந்து கற்றுக்கொள்ளத் தேவையில்லை.அவை நம் மரபுகளில், நம் இரத்தத்தில் உள்ளது. நம் நாடு இவற்றை செயல்படுத்தி உயிரோடு வைத்திருக்கிறது. இந்தியாவின் எந்தவொரு குடிமகனுக்கும் எதிராக சி.ஏ.ஏ மற்றும் என்.ஆர்.சி உருவாக்கப்படவில்லை. சி.ஏ.ஏ காரணமாக இந்திய முஸ்லிம்கள் எந்த இழப்பையும் சந்திக்க மாட்டார்கள்.

நாடு சுதந்திரமடைந்த பிறகு, சிறுபான்மையினரைக் கவனித்துக் கொள்வோம் என முதல் பிரதமர் தெரிவித்தார். அது இப்போது வரை செய்யப்பட்டு வருகிறது. அதை நாம் தொடர்ந்து செய்வோம். பாகிஸ்தான் அவ்வாறு செய்யவில்லை. அனைத்து நாடுகளுக்கும் அவர்களது குடிமக்கள் யார் எனத் தெரிந்துகொள்ள உரிமையுண்டு. சி.ஏ.ஏ மற்றும் என்.ஆர்.சி அரசியல் களத்தில் உள்ளது. அரசாங்கம் அதில் ஈடுபட்டுள்ளது. அரசியல் லாபத்திற்காக இந்த இரண்டு விவகாரங்களையும் சுற்றி, வகுப்புவாத பிரச்சாரத்தை உருவாக்குகிறார்கள்.

இவ்வாறு மோகன் பகவத் கூறியுள்ளார்.

caa Mohan Bhagwat NRC
இதையும் படியுங்கள்
Subscribe