Skip to main content

25 ஆண்டுகால வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கும் பட்ஜெட்; விரைவில் எல்.ஐ.சி பொதுப்பங்கு வெளியீடு - நிர்மலா சீதாராமன்

Published on 01/02/2022 | Edited on 01/02/2022

 

nirmala sitharaman

 

இந்திய நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் 2022-23ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யத் தொடங்கியுள்ளார்.

 

பட்ஜெட் உரையை தொடங்கியுள்ள நிர்மலா சீதாராமன் கூறியதாவது; 

 

தடுப்பூசி திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியதால் கரோனா பாதிப்பு குறைந்துள்ளது. கரோனா காலத்திலும் நாட்டின் பொருளாதாரம் முன்னேறி வருகிறது. ஏழைகள், நடுத்தர மக்களின் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு செயலாற்றி வருகிறது. உலகில் உள்ள பெரிய நாடுகளில், இந்தியாவின் பொருளாதாரம்தான் அதிக வேகத்தில் வளர்ச்சியடைந்து வருகிறது. ஏழைகளுக்கு அனைத்து வாய்ப்புகளையும் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சுயசார்பு இந்தியாவின் கீழ் 60 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. சுயசார்பு திட்டத்தின் கீழ் தொழில்துறையை ஊக்குவிக்கும் முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 

 

அடுத்த 25 ஆண்டுகால வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த வளர்ச்சி என்பதைக் கவனத்தில் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. எல்.ஐ.சி பொதுப்பங்கு வெளியீடு விரைவில் நடைபெறும். அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற முக்கியத்துவம் வழங்கப்படும். இளைஞர்கள், பெண்கள், ஏழை எளிய மக்களின் வளர்ச்சிக்கான பட்ஜெட்டாக இது இருக்கும். இளைஞர்கள் தொழில் தொடங்க பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

 

நடப்பு நிதியாண்டில், பொருளாதார வளர்ச்சி 9.27 சதவீதமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி திட்டம் விரைவாக செயல்படுத்தப்பட்டது பொருளாதார மீட்சிக்கு பெரிய அளவில் உதவியது. நாடு முழுவதும் வரும் நிதியாண்டில் 22 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவுக்கு ரயில்வே கட்டமைப்பு மேம்படுத்தப்படும். அடுத்த நிதியாண்டில் 22 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவுக்கு சாலை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். 2023-க்குள் 2 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவுக்கு ரயில்வே கட்டமைப்பு மேம்படுத்தப்படும்.

 

உள்ளூர் வணிகங்களை மேம்படுத்த ஒரு ரயில் நிலையம், ஒரு உற்பத்தி பொருள் என்ற நடைமுறை பின்பற்றப்படும். மூன்று ஆண்டுகளில் 400 வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும். போக்குவரத்து வசதிகள், உள்கட்டமைப்பு வசதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள் 25 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்திற்கு விரிவுபடுத்தப்படும். இயற்கை விவசாய முறை ஊக்குவிக்கப்படும். குறைந்தபட்ச கொள்முதல் விலை மூலம் வேளாண் விளை பொருட்கள் கூடுதலாக கொள்முதல் செய்யப்படும். இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்