nia says swapna suresh has connections with kerala cm office

Advertisment

தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷுக்கு கேரளா முதல்வர் அலுவலகத்துடன் நெருங்கிய தொடர்பு இருந்துள்ளதாக நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ தரப்பு தெரிவித்துள்ளது.

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரக பெயரைப் பயன்படுத்தி அமீரகத்திலிருந்து தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு அண்மையில் ரகசியத் தகவல் கிடைத்த நிலையில், அதன் அடிப்படையில், ஜூன் மாதம் 30-ஆம் தேதி தூதரகத்துக்கு வெளிநாட்டிலிருந்து வந்த ஒரு பார்சலை, அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அதில் 30 கிலோ தங்கம் இருந்துள்ளது. தூதரகத்தின் பெயரில் இவ்வளவு பெரிய தங்கக் கடத்தல் நடைபெற்றது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பான விசாரணை முடுக்கிவிடப்பட்டது.

இதில் முக்கியமான நபராகப் பார்க்கப்படும் ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்ட நான்கு பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஸ்வப்னா சுரேஷை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்தச் சூழலில், இன்று நடைபெற்ற நீதிமன்ற விசாரணையின் போது கேரள முதல்வர் அலுவலகத்துடன் ஸ்வப்னா சுரேஷூக்கு நெருங்கிய தொடர்பு இருந்துள்ளதாகவும், ஸ்வப்னா சுரேஷை, கேரள முதல்வருக்குத் தெரியும் எனவும் என்.ஐ.ஏ. தரப்பு தெரிவித்துள்ளது.