NIA notice on Rs 10 lakh for information about Lawrence Bishnoi's brother

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக் கடந்த 14ஆம் தேதி மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை தொடர்பாக, உத்தரப் பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த தர்ம்ராஜ் ராஜேஷ் காஷ்யப் மற்றும் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த குர்மைல் பல்ஜீத் சிங் ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்து விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட இருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் உடைய கூட்டாளிகள் என தெரியவந்துள்ளது. மேலும், பாபா சித்திக் கொலைக்கு முழு பொறுப்பேற்பதாக லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் முகநூல் பக்கத்தில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisment

முன்னதாக இந்த கொலை அரசியல் ரீதியான கொலையாக இருக்கலாம் என கருதப்பட்ட நிலையில் பஞ்சாப்பை சேர்ந்த லாரன்ஸ் பிஷ்னோய் தரப்பு இந்த கொலைக்கு பொறுப்பேற்றுள்ளது. பல்வேறு கொலை குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள பிரபல ரவுடியான லாரன்ஸ் பிஷ்னோய் தற்பொழுது, எல்லை தாண்டிய போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். கடந்த ஏப்ரல் மாதம் மும்பையில் உள்ள பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய வழக்கிலும் அவரது பெயர் குறிப்பிடப்பட்டது. ஆனால் மும்பை காவல்துறை அவர் மீதும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

Advertisment

இந்த சூழ்நிலையில் தான், ஒய் பிளஸ் பாதுகாப்பில் இருந்த முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். லாரன்ஸ் பிஷ்னோய், சிறையில் இருக்கும் போது பாபா சித்திக் கொலை எப்படி நிகழ்த்தப்பட்டது, சிறையில் தொலைபேசி வசதி உள்ளிட்ட தகவல் தொடர்பு வசதிகள் கிடைத்ததா என்பது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், பல்வேறு வழக்குகளில் என்.ஐ.ஏவால் தேடப்பட்டு வரும் குற்றவாளியும், லாரன்ஸ் பிஷ்னோய்யின் சகோதரருமான அன்மோல் பிஷ்னோய் குறித்த தகவலை தெரிவித்தால், ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று என்.ஐ.ஏ அறிவித்துள்ளது. அன்மோல் பிஷ்னோய் மீது கடந்த 2022ஆம் ஆண்டில் இரண்டு குற்றப்பத்திரிகையை என்.ஐ.ஏ தாக்கல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment