
மாம்பழ மனிதன் என்று அழைக்கப்படும் பத்மஸ்ரீ விருது பெற்ற கலிமுல்லா கான், புதிய மாம்பழ வகைக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் பெயரை வைத்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் கலிமுல்லா கான். 85 வயதான இவர், விவசாயியாகவும் தோட்டக்கலை நிபுணராகவும் இருந்து வருகிறார். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கலப்பின மாம்பழ வகைகளை உருவாக்கி அவற்றுக்கு பிரபலங்களின் பெயர்களை சூட்டி வருகிறார். நடிகர்களான அமிதாப் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய், முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சோனியா காந்தி, அகிலேஷ் யாதவ் போன்ற பிரபலங்களின் பெயர்களை, தான் உருவாக்கும் புதிய வகை மாம்பழங்களுக்கு வைத்து பிரபலமானார். தோட்டக்கலை மற்றும் பழ வளர்ப்பில் தனது தனித்துவமான பங்களிப்புக்காக இவர் பத்மஸ்ரீ விருது பெற்றார்.
இந்த நிலையில், பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்கு பிறகு, கலிமுல்லா கான் இரண்டு புதிய வகையான மாம்பழங்களை உருவாக்கினார். அந்த மாம்பழங்களுக்கு ‘ராஜ்நாத் ஆம்’ என்று இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் பெயரும், மற்றொரு மாம்பழத்திற்கு ‘சிந்தூர் ஆம்’ என்ற பெயரும் வைத்துள்ளார். இது குறித்து கலிமுல்லா கான் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது, “இந்த நாட்டுக்கு சேவை புரிந்த பலரின் பெயர்களை என்னுடைய மாம்பழங்களுக்கு வைத்துள்ளேன். இந்த பெயர்கள் தலைமுறை தலைமுறையாக நிலைதிருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். சில நேரங்களில் சிறந்த தலைவர்களை மக்கள் மறந்துவிடுவார்கள். ஆனால், ஒரு மாம்பழம் அவர்களுக்கு ராஜ்நாத் சிங்கின் வேலைகளை நினைவூட்டினால், அது மதிப்புக்குரியது. அவர் சமநிலையான சுயசிந்தனை மிக்க தலைவர். பாகிஸ்தான் பற்றிய விவாதத்தின் போது அவர் போரை விரும்பவில்லை, அமைதியை விரும்புகிறார் என்று நான் கண்டறிந்தேன்.

ஆனால் இன்று, சூழ்நிலை மேம்பட்டுள்ளது. மோதல் அல்ல, அமைதிதான் தீர்வு. பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். போர் வெறுப்பை மட்டுமே அதிகரிக்கிறது, அதனால் அனைவருக்கும் தீங்கு விளைவிக்கிறது. நாம் அனைவரும் மனிதர்கள். பிரிவினை அதிக சேதத்தை மட்டுமே ஏற்படுத்துகிறது. நான் இறந்த பிறகும் மக்கள் பல்வேறு வகையான மாம்பழங்களை ருசித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்திய இராணுவத்தின் நடவடிக்கை வெற்றியடைந்த தருணத்தில் இருந்து, இந்த சாதனைக்கும் அதன் பின்னணியில் இருந்த கட்டிடக் கலைஞருக்கும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு மாம்பழத்தை வளர்க்க விரும்பினேன்.
இந்த இரண்டு மாம்பழங்களுக்கும், இந்த பருவத்திற்கான சுவையான பழ வகையை உருவாக்க, நாங்கள் சௌசா, அமிகுதர்ஷா, லாங்டா மற்றும் தஷேரி ஆகியவற்றை வெவ்வேறு விகிதாச்சாரங்களில் கலக்கினோம், அது ஜூலை மாதம் வரை கிடைக்கும். மாம்பழம் உலகில் உள்ள சில பழங்களில் ஒன்றாகும். இது மக்கள் ஆரோக்கியமாக இருக்க உதவும் மேலும், குணப்படுத்தும் சக்திகளைக் கொண்டுள்ளது. மாம்பழத்தின் மருத்துவ நன்மைகள் பற்றிய ஆதாரங்களை பல்வேறு இடங்களில் ஆவணப்படுத்தியுள்ளேன். நாங்கள் பழங்களை விற்பனை செய்வதில்லை. ஆனால் பார்வையாளர்களுக்கு இலவசமாக விநியோக்கிறோம்” என்று கூறினார்.