விமானத்தில் பயணிப்பவர்களுக்கான புதிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
கரோனா பாதிப்பு காரணமாக உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான போக்குவரத்தை மத்திய அரசு நிறுத்தி வைத்திருந்தது. இந்தச் சூழலில், ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருவதால், விமானப் போக்குவரத்தும் படிப்படியாகத் தொடங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விமானத்தில் பயணிப்பவர்களுக்கான புதிய விதிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. விமான பொதுப் போக்குவரத்து இயக்குநரகம் பிறப்பித்துள்ள இந்தப் புதிய உத்தரவுகளின்படி, உள்நாட்டு விமானத்தில் பயணிக்கும் பயணிகளுக்குப் பதப்படுத்தப்பட்ட சாப்பாடு, தின்பண்டங்கள், பானங்கள் உள்ளிட்டவற்றை வழங்கலாம் எனவும், சர்வதேச விமானங்களில் சூடான சாப்பாடு மற்றும் அளவான பானங்களை வழங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல தட்டுகள், பாட்டில்கள் உள்ளிட்டவற்றை ஒருமுறைக்கு மேல் பயன்படுத்தக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், முகக்கவசம் அணியாத பயணிகளின் பெயரைப் பயணத்தின் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.