Skip to main content

புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தலுக்கான புதிய தேதி அறிவிப்பு!

Published on 09/10/2021 | Edited on 09/10/2021

 

New date for Puducherry local body elections announced!

 

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதன்பிறகு பல்வேறு காரணங்களால் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. 10 ஆண்டுகளுக்குப் பிறகு அக்டோபர் மாதத்தில் மூன்று கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பினை கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி அன்று மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது. 

 

அதனைத் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கான ஒதுக்கீட்டில் குளறுபடி இருப்பதைச் சுட்டிக்காட்டி முத்தியால்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. பிரகாஷ் குமார் உள்ளிட்டோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். குளறுபடியான இடஒதுக்கீட்டு முறையை ரத்துசெய்த நீதிமன்றம், இடஒதுக்கீடு குளறுபடிகளை சரிசெய்து ஐந்து நாட்களுக்குள் புதிய தேர்தல் அறிவிப்பை வெளியிட உத்தரவிட்டது.

 

அதையடுத்து தேர்தல் ஆணையம் 2019ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இட ஒதுக்கீடு வழங்கும் ஆணையை ரத்து செய்ததோடு, திருத்தப்பட்ட ஒதுக்கீடு பட்டியலை வெளியிட்டு, கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி வெளியிடப்பட்ட தேர்தல் அறிவிப்பையும் திரும்பப் பெற்றது.

 

இந்த நிலையில் மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தலுக்கான புதிய தேர்தல் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் ராய் பி. தாமஸ் வெளியிட்டுள்ள தேர்தல் அறிவிப்பில் கூறியிருப்பதாவது, "சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் புதுச்சேரியில் 5 நகராட்சிகள், 10 கொம்யூன் பஞ்சாயத்துகளில் உள்ள 1,149 பதவிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

முதற்கட்டமாக புதுச்சேரி, உழவர்கரை நகராட்சிகளுக்கு அக்டோபர் 11ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி அக்டோபர் 18ஆம் தேதி நிறைவடையும். நவம்பர் 2ஆம் தேதி தேர்தல் நடைபெறும். இரண்டாவது கட்டமாக அரியாங்குப்பம், பாகூர், மண்ணாடிப்பட்டு, நெட்டப்பாக்கம், வில்லியனூர் ஆகிய பஞ்சாயத்துகளுக்கு அக்டோபர் 15ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி அக்டோபர் 22ஆம் தேதி நிறைவடைகிறது. அதைத் தொடர்ந்து நவம்பர் 7ஆம் தேதி தேர்தல் நடக்கிறது.

 

மூன்றாவது கட்டமாக காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய நகராட்சிகளுக்கும், கோட்டுச்சேரி, நெடுங்காடு, நிரவி, திருமலைராயன்பட்டினம், திருநள்ளாறு ஆகிய கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கும் அக்டோபர் 22ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி அக்டோபர் 29ஆம் தேதி நிறைவடைகிறது. நவம்பர் 13ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மூன்று கட்ட வாக்குப்பதிவு முடிந்த பின்னர் நவம்பர் 17ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

 

இந்த உள்ளாட்சி தேர்தலில் 4 லட்சத்து 72 ஆயிரத்து 222 ஆண்கள், 5 லட்சத்து 30 ஆயிரத்து 930 பெண்கள், 117 திருநங்கைகள் என மொத்தம் 10 லட்சத்து 3 ஆயிரத்து 755 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

 

இந்த தேர்தலையொட்டி தேர்தல் நன்னடத்தை விதிகள் உடனடியாக அமலுக்குவருகிறது. புதுச்சேரி மாநில தேர்தல் ஆணைய இணையதளத்தில் (http://sec.py.gov.in) அனைத்து விவரங்களும் உள்ளன. இடஒதுக்கீடு உள்ளிட்ட விவரங்கள் அனைத்தையும் பார்க்கலாம். அனைத்து நடவடிக்கைகளும், அறிவிப்புகளும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு மற்றும் இந்திய சட்ட விதி அளித்துள்ள அதிகாரத்தின்படி செய்யப்படுகின்றன." இவ்வாறு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இதனிடையே மாநில தேர்தல் ஆணையம் கடந்த 2019ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இடஒதுக்கீட்டை ரத்து செய்து, 2016ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலின்போது பின்பற்றப்படும் நடைமுறைகள்படி புதிய இடஒதுக்கீடு அறிவிப்பை வெளியிட்டது. இதில் பிற்படுத்தப்டோர், பட்டியலினத்தவருக்கான இடஒதுக்கீடு சரிவர கையாளப்படவில்லை என்பதால் திமுக, காங்கிரஸ், இடதுசாரி கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அரசியல் கட்சிகளின் எதிர்ப்பைக் கருத்தில்கொள்ளாத மாநில தேர்தல் ஆணையம், புதிய இடஒதுக்கீட்டுப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதனால் திமுக - காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் தேர்தல் அறிவிப்பை எதிர்த்து இன்று (09.10.2021) கூட்டம் நடத்துகின்றனர். 

 

இதேபோல் முரண்பாடான இடஒதுக்கீடு முறை வெளியிடப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை குறித்து ஆலோசிக்க முதலமைச்சர், சட்டப்பேரவை தலைவரிடம் அரசியல் கட்சிகள் வலியுறுத்தியதன் பேரில் புதுச்சேரியில் அனைத்து கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சட்டப்பேரவை அலுவலகத்தில் இன்று நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை நடத்த உள்ளனர். இதில் எடுக்கப்படும் முடிவுகளை மாநில தேர்தல் ஆணையரைச் சந்தித்து வலியுறுத்த உள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Next Story

'பாஜக காங்கிரஸ் பணம் தருகிறது' - தனி ஆளாக போராட்டத்தில் இறங்கிய சுயேச்சை வேட்பாளர்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'BJP Congress gives money' - Independent candidate goes into the struggle alone

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் பாஜக, காங்கிரஸ் ஆகிய அரசியல் கட்சியினர் வாக்குக்கு பணம் தருவதாக குற்றச்சாட்டு தெரிவித்து சுயேட்சை வேட்பாளர் ஒருவர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ், பாஜக, அதிமுக, நாம் தமிழர், சுயேச்சைகள் என மொத்தமாக 26 பேர் களத்தில் உள்ளனர். இந்நிலையில் சுயேச்சை வேட்பாளர் மாஸ்கோ என்பவர் காங்கிரஸ் மற்றும் பாஜக நிர்வாகிகள் வாக்காளர்களுக்கு பணம் தருவதாக புகார் தெரிவித்துள்ளார். உடனடியாக இரு கட்சி வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது தேர்தலை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனக் கருப்பு கொடியை ஏந்தியபடி சாலையின் நடுவே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். உடனடியாக அங்கு வந்த போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.