Skip to main content

“நேரு செங்கோலை கைத்தடியாகப் பயன்படுத்தினார்” - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

Published on 10/08/2023 | Edited on 10/08/2023

 

Nehru used the scepter as a crutch Union Minister Nirmala Sitharaman

 

கடந்த ஜூலை 20 ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நாளை வரை நடைபெற உள்ளது. இதனிடையே எதிர்க்கட்சிகள் அனைவரும் மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் என்று கூறி மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தனர்.

 

இந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான விவாதங்கள் நேற்று முன்தினம் முதல் இன்று வரை மூன்றாவது நாளாக விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நம்பிக்கையில்லாத்  தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்துப் பேசுகையில், “இந்தியப் பொருளாதாரம் வலுவாக இருப்பதாக பல்வேறு ஆய்வு நிறுவனங்கள் அறிக்கை தந்து வருகின்றன. 2023 - 24 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.5%ஆக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.  உலகிலேயே பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வரும் நாடாக இந்தியா உள்ளது. மத்திய அரசின் கொள்கைகளால் கடந்த 9 ஆண்டுகளாக நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது. நாட்டில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளோர் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகிறது.

 

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானம் தாமதத்திற்குத் தமிழக அரசே காரணம். நிலம் கையகப்படுத்தும் பணிகளை தமிழக அரசு தாமதமாக மேற்கொண்டதால் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்குத் தாமதம் ஏற்பட்டுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை மத்திய அரசு கட்டிக் கொடுப்பதால் தமிழக அரசுக்கு நிதிச்சுமை இல்லை. சுதந்திரம் அடைந்தபோது தனக்கு வழங்கப்பட்ட செங்கோலை கைத்தடியாகப் பயன்படுத்தினார் நேரு. செங்கோலை கைத்தடியாகப் பயன்படுத்தியது தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அவமானம் இல்லையா. செங்கோலை நாடாளுமன்றத்தில் பெருமைமிகு இடத்தில் பிரதமர் மோடி வைத்தால் அதை ஏற்க முடியாதா. சிலப்பதிகாரம் நாம் அனைவரும் தமிழர்கள் என்று சொல்கிறதே தவிர திராவிடர்கள் என்று சொல்லவில்லை. சிலப்பதிகாரம் என்ன சொன்னதோ, அந்த வழியில்தான் பிரதமர் மோடி ஆட்சி நடத்துகிறார்.

 

தமிழ்நாட்டில் இந்தி, சமஸ்கிருதம் கற்றுக் கொள்ளக்கூடாது என்ற திணிப்பு இருந்தது. பிரதமர் மோடி புறநானூறு, திருக்குறள் உள்ளிட்டவை பற்றிப் பேசித் தமிழைப் பெருமையடையச் செய்துள்ளார். தென்னிந்தியாவின் முன்னேற்றத்தில் மோடி அதீத கவனம் செலுத்தி வருகிறார். ஜல்லிக்கட்டு விவகாரத்தில் யாரும் முதலைக் கண்ணீர் வடிக்க வேண்டாம். ஜல்லிக்கட்டுக்குத் தடை விதித்தபோது காங்கிரஸ் கட்சியுடன் திமுக கூட்டணியில் இருந்தது. மணிப்பூர், டெல்லி, ராஜஸ்தான் என எங்கு பெண்கள் பாதிக்கப்பட்டாலும் கவலைப்பட  வேண்டும்” எனத் தெரிவித்தார்.

 

 

மேலும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பிரதமர் மோடி தற்போது மக்களவைக்கு வருகை புரிந்துள்ளார். மோடி மக்களவைக்கு வருகை தந்த போது ஆளும் கட்சி எம்.பி.க்கள் 'மோடி... மோடி...' என முழக்கமிட்டனர். பிரதமர் மோடியின் பதிலுரையைத் தொடர்ந்து நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பாஜக ஆட்சிக்கு வந்தால் தேர்தல் பத்திரம் கொண்டு வருவோம்'-நிர்மலா சீதாராமன் 

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

தேர்தலுக்கு முன்னதாகவே தேர்தல் பத்திரம் தொடர்பான கருத்துக்கள் மற்றும் நீதிமன்றத்தின் உத்தரவுகள் இத்தேர்தலில் மிகப்பெரும் பேசு பொருளாக இருந்தது. உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்ட  நிலையில் பாஜக அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திரத் திட்டம் என்பது அரசியலமைப்புக்கு எதிரானது எனக் கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், நன்கொடை வழங்கியோர், நன்கொடையைப் பெற்ற கட்சிகளின் விவரங்களை ஆணையத்திடம் வழங்க உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் மீண்டும் தேர்தல் பத்திரங்களைக் கொண்டு வருவோம் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் தேர்தல் பத்திரங்களைக் கொண்டு வருவது தொடர்பாக ஆலோசிப்போம். அனைவரும் ஏற்கத்தக்க வகையில் தேர்தல் பத்திரம் கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வோம். தேர்தல் பத்திரம் வெளிப்படை தன்மையானது, கருப்பு பணத்தை ஒழிப்பதற்கானது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Next Story

ஆளே இல்லாத 'ரோட் ஷோ'- அப்செட்டில் பாஜக!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Unmanned 'road show'- BJP in upset

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகம் வந்திருக்கும் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாஜக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பல்வேறு இடங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தொடர்ந்து இன்று கோவையில் நிர்மலா சீதாராமன் பங்கேற்கும் 'ரோட் ஷோ' நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதிக தொண்டர்கள் பொதுமக்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் பாதுகாப்பு பணிகளுக்காக காவல்துறையினரும் குவிக்கப்பட்டிருந்தனர். ஆனால் ரோட் ஷோ நிகழ்ச்சி நடைபெறும் கோவை 100 அடி சாலையில் பெரும் வரவேற்பு இல்லாத அளவிற்கு சுமார் 200 பேர் மட்டுமே அங்கு கூடியிருந்தனர். நிர்மலா சீதாராமன் வாகனத்தில் செல்லும் வழியில் மக்கள் பெரிதாக ஆர்வம் காட்டாத நிலையே இருந்தது. பாஜக தலைவர்களின் ரோட் ஷோவுக்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்காதது பாஜக கட்சியினருக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.